தடையை மீறி சேலம் செல்ல முயன்ற ஸ்டாலின் கோவையில் கைது- மாலையில் விடுதலை
சேலம் கட்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட தடையை மீறி சென்ற திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கோவையில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கட்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி கோவையில் இருந்து கார் மூலம் செல்ல முயன்ற ஸ்டாலினை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
எடப்பாடி அருகே, திமுக தூர்வாரிய கட்சராயன்பாளையம் ஏரியில் மணல் அள்ள அனுமதி வழங்கியது சட்ட விரோதம். அந்த ஏரியை நாளை நிச்சயம் பார்வையிடுவேன். எனது வருகையை தடுக்கவே அதிமுக கலவரத்தில் ஈடுபடுகின்றது. அராஜக செயலில் ஈடுபடுமாறு போலீசாருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஏரியை தூர்வார முதல்வர் நடவடிக்கை எடுத்திருந்தால், திமுக அப்பணியை செய்திருக்காது. சேலத்தில் அமைதியை நிலைநாட்ட உள்துறை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் நேற்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் சேலத்திற்கு ஸ்டாலின் வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாக சேலம் எஸ்.பி ராஜன் இன்று கூறினார்.
எனினும் கோவைக்கு விமானம் மூலம் வந்த ஸ்டாலின் சாலை வழியாக சேலம் செல்ல முயன்றார். இதனையடுத்து போலீசார் ஸ்டாலினை தடுத்து நிறுத்தினர்.
மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் கோவையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தடையை மீறி ஸ்டாலின் செல்ல முயன்றால் அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகவே திமுகவினர் குவிந்தனர். இதனால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், திமுக மனிதச்சங்கிலி போராட்டத்தை அசிங்கப்படுத்த எடப்பாடி பழனிச்சாமி அரசு முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார்.
சேலம் மனிதச்சங்கிலி போராட்டத்திற்குத்தான் தடை உள்ளதே தவிர சாலை வழியாக செல்ல தடை ஏதும் கிடையாது என்று கூறினார்.
இதனையடுத்து தடையை மீறி சேலம் செல்ல முயன்ற மு.க.ஸ்டாலினை கைது செய்யப்பட்டார். அனுமதியின்றி சேலம் ஏரியை பார்வையிட செல்ல முயற்சித்ததால் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட ஸ்டாலின் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார். மாலை 4 மணியளவில் ஸ்டாலின் விடுதலை செய்யப்பட்டார்.