அதிமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்வது வேதனை அளிக்கிறது: மு.க.ஸ்டாலின்
சென்னை: அதிமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் சூழல் உருவாகியிருப்பது வேதனை அளிப்பதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் முகநூல் பதிவு:
தமிழக காவல்துறையைச் சேர்ந்த உதவி போலீஸ் சூப்பிரண்டன்ட் ஹரிஸ் சென்னை எக்மோரில் உள்ள போலீஸ் அதிகாரிகளின் மெஸ்ஸிலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. அவரது பெற்றோருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தன் பேட்சில் உள்ள மற்ற அதிகாரிகள் எல்லாம் எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று விட்ட நிலையில் 2009- பேட்ச் அதிகாரியான ஹரிஸுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இவருக்கு மட்டும் ஏன் பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என்பது மற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டத்திலேயே கேள்வியாக எழுந்திருக்கிறது.
அதிமுக ஆட்சியில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி. திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டார். இப்போது ஏ.எஸ். பி அந்தஸ்தில் உள்ள நேரடி ஐ.பி.எஸ். அதிகாரியான ஹரிஸ் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். எங்கும் மர்ம மரணம், தற்கொலை என்று அரசு அதிகாரிகள் மத்தியில் இப்படியொரு சூழல் அதிமுக ஆட்சியில் ஏற்பட்டிருப்பது வேதனைக்குரியது.
அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மனப்புழுக்கத்திற்கோ, தொல்லைகளுக்கோ ஆக்கப்படக் கூடாது என்பதுதான் ஆரோக்கியமான அரசு நிர்வாகத்திற்கு அழகாக இருக்கும். அப்படியிருக்கையில் இப்படி அடுத்தடுத்து நிகழும் அதிகாரிகளின் மரணம் தமிழக அரசு நிர்வாகத்தில் புகுந்து விட்ட அழுத்தங்களை எடுத்துக் காட்டும் வகையில் இருக்கிறது. அதிமுக ஆட்சியில் இப்படியொரு சூழல் உருவாகியிருப்பது நிச்சயம் கவலைக்குறியது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications