குமரி முதல் காஞ்சி வரை ஸ்டாலின் சுற்றுப்பயணம்: சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் திமுக
தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிரதான எதிர்கட்சியான திமுக தயாராகிறது. இதன் முதற்கட்டமாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரும் செப்டம்பர் 25 முதல் நவம்பர் 8 வரை குமரியில் தொடங்கி காஞ்சி வரை 'நமக்கு நாமே' சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்படாவிட்டாலும் சட்டசபை தேர்தலை சந்திக்க முழு மூச்சோடு தயாராகிவருகிறார் மு.க.ஸ்டாலின். கூட்டணியில் யார் யார் என்று உறுதி செய்யப்படவில்லை. ஆள் ஆளுக்கு கூட்டணியில் பங்கு என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர்.திமுக தலைமையை எந்த கட்சி ஏற்கும் என்று தெரியவராத நிலையில் தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்க தயாராகிவிட்டார் ஸ்டாலின்.

234 தொகுதிகளிலும்
மு.க.ஸ்டாலின், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்கிறார். மக்களை நேரடியாக சந்திக்கும் அதே வேளையில், பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் ஒருங்கிணைந்த செய்தி தொடர்பு சாதனங்கள் மூலம் இந்த பயணத்தின் நோக்கம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுச் செம்மைப்படுத்தப்படும். இதுவரை எந்தப் பயணத்திலும் இல்லாத அளவிற்கு ஏறக்குறைய 4 கோடி மக்களை சந்திப்பதற்கு ஏற்ற விதத்தில் இப்பயணத்தின் நிகழ்ச்சி நிரல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

டவுன்ஹால் கூட்டங்கள்
பயணத்தின் போது மு.க.ஸ்டாலின் நகரங்களில் "டவுன் ஹால் கூட்டங்கள்" "திறந்த வெளிக் கூட்டங்கள்"நடத்தி பல்வேறு தரப்பு மக்கள்,பொதுநலச் சங்கங்கள், ஈடுபாடுள்ள அமைப்பினர் ஆகியோரைச் சந்தித்து மாநில நலன் மற்றும் முன்னேற்றம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் பற்றியும், பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பற்றியும் அவர்களுடைய கருத்துக்களை நேரடியாக அறிவார்.

மக்களுடன் கலந்துரையாடல்
நடைப்பயணம், சாலையோரக் கூட்டங்கள், கிராமங்களில் பயணிப்பது போன்றவற்றின் மூலம் பெருமளவுக்கு மக்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும்.களநிலவரம் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து கட்சித் தொண்டர்களைச் சந்தித்து அவர்களது கருத்துக்களைக் கேட்கிறார் மு.க.ஸ்டாலின்.
2016ல் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான பணிகளில் தீவிரமாகவும், தீர்க்கமாகவும்செயல்பட வேண்டும் என்று அவர்களை உற்சாகப்படுத்தவும், ஊக்குவிக்கவும் இந்தப் பயணத்தைப் பயன்படுத்திக் கொள்வார்.அதே நேரத்தில் பயணம் மேற்கொள்ளும் வழி நெடுக திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பொதுமக்களுடன் "மாபெரும் மக்கள் சந்திப்பு" "கலந்துரையாடல்" போன்றவை நடைபெறும்.

வாங்க பேசலாம்
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டியிருக்கின்ற"பேசலாம் வாங்க நிகழ்ச்சி" போல் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஒன்றிய அளவில் மக்களைத் திரட்டி அவர்களின் பிரச்சினைகளையும், மதிப்பு மிக்க ஆலோசனைகளையும் திமுகவினர் கேட்டு அறிவார்கள்.

தேர்தல் அறிக்கையில்
இப்படி நடைபெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் தெரியவரும் மக்கள் பிரச்சினைகள் மற்றும் மக்களின் ஆலோசனைகள் அடங்கிய அறிக்கை ஒன்று தொகுக்கப்பட்டு அவை வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும்.
மாநிலத்தைச் சிதைத்துவரும் நிர்வாகச் சீர்கேடு, அ.தி.மு.க. அரசின் நிறைவேற்றப்படாத பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வீடு வீடாகக் திமுகவினர் பிரச்சாரம் மேற்கொள்வார்கள்.

நமக்கு நாமே பயணம்
செப்டம்பர் 25-ஆம் தேதியன்று கன்னியாகுமரியிலிருந்து மு.க.ஸ்டாலின் "நமக்கு நாமே" பயணம் தொடங்குகிறார் என்று திமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படியோ முதல்வர் வேட்பாளராக இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் மக்களை சந்திக்க தயாராகிவிட்டர் மு.க.ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications