பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் ஸ்டாலின்
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மாலை 5 மணிக்கு ஸ்டாலின் சந்திக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் முதல்வருக்கான ஆதரவை திரும்பப் பெற்ற நிலையில் ஆளுநரை சந்திக்க திமுக சார்பில் நேரம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.
திமுக, காங்கிரஸ்கட்சி எம்எல்ஏக்களுடன் சென்று ஆளுநரை சந்திக்க உள்ளார் ஸ்டாலின். அப்போது சட்டசபையை கூட்டி எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகள் இணைந்த பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவு டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் திரும்ப பெற்றனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மை இழந்து விட்டது.

திமுக கடிதம்
முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை பெரும்பான்மை இழந்துவிட்டதால் அவர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் திமுக சார்பில் ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது.

ஆளுநருடன் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று திமுக முதன்மைச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள், எம்.பி., கனிமொழி ஆகியோர் ஆளுநரை சந்தித்து தங்களின் தரப்பு கோரிக்கையை வலியுறுத்தினர். ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தினகரன் சந்திப்பு
கடந்த இரு தினங்களுக்கு முன்பு டிடிவி தினகரன் 21 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறினார். கருணாஸ் உள்ளிட்ட மேலும் 2 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.

புதுச்சேரி டூ குடகு
டிடிவி தினகரனுக்கு இப்போது 20 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளனர். குதிரை பேரம் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ள டிடிவி தினகரன், எம்எல்ஏக்களை பாதுகாப்பாக குடகு ரிசார்ட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார். இன்னும் சில வாரங்கள் அங்கே தங்கியுள்ளனர்.

ஸ்டாலின் சந்திப்பு
இந்த சூழ்நிலையில் ஆளுநரை மீண்டும் சந்திக்க நேரம் கேட்டு கடிதம் கொடுத்தார் ஸ்டாலின். செப்டம்பர் 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஆளுநரை சந்திக்க ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை வக்கெடுப்பு
ஆளுநரை சந்திக்கும் ஸ்டாலின், சட்டசபையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளார். எதிர்கட்சியினர் கோரிக்கைக்கு ஆளுநர் செவி சாய்ப்பாரா? நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவாரா? என்பது இன்று தெரிய வரும்.












Click it and Unblock the Notifications