இதுவரை 100 தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் நிறைவடைந்துள்ளது - ஸ்டாலின் தகவல்
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் கடந்த 22-ம் தேதி முதல் மாவட்ட வாரியாக நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி பொது செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.
முதல் நாளில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 135 பேரிடம் மட்டும் மதியம் வரை நேர்காணல் நடத்தப்பட்டது.
பின்னர் மாலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருந்த 204 பேரிடம் நேர்காணல் நடைபெற்றது. அத்துடன் முதல் நாள் நேர்காணல் முடித்து கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிட விருப்பமனு செய்தவர்களுக்கான நேர்காணல் அடுத்தடுத்த நாள்கள் நடைபெற்றன.
இந்நிலையில் 5-வது நாள் நேர்காணல் முடிந்த பிறகு சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஊர் ஊராகச்சென்று மக்களின் கருத்துக்களை பெற்று திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை இறுதி செய்யப்பட்ட பின்னர் திமுக தலைவர் கருணாநிதி விரைவில் வெளியிடுவார் என்று தெரிவித்தார்.
மேலும், தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும். இதுவரை 100 தொகுதிகளில் 1,298 பேரிடம் நேர்காணல் நடை பெற்றுள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.