பெருந்தன்மையானவர் ஜெயலலிதா... மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
முதல்வர் ஜெயலலிதா மிகவும் பெருந்தன்மையானவர் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா பெருந்தன்மையான எண்ணம் கொண்டவர் என்று திமுக பொருளாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா குறித்து ஸ்டாலின் சன் செய்திகளுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், சுனாமி வந்த நேரத்தில் தான் வசனம் எழுதிய திரைப்படங்கள் மூலமாக வந்த நிதியை முதல்வரிடம் கொடுக்கச் சொன்னார் திமுக தலைவர் கருணாநிதி.
நானும் தலைமைச் செயலகம் சென்று முதல்வர் ஜெயலலிதாவிடம் கொடுத்தேன். அப்போது என்னிடம் எனது நலன் குறித்து விசாரித்தார் ஜெயலலிதா. கருணாநிதி குறித்தும் நலன் விசாரித்தார். சில அரசியல் பிரச்சினைகள் குறித்துக் கூட கேட்டார். அது என்னைக் கவர்ந்தது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னை அழைத்திருந்தார். அப்போது என்னை 11வது வரிசையில் உட்கார வைத்து விட்டனர். இது சில நாட்களுக்குப் பிரச்சினையாக நீடித்தது.
இதை அறிந்த ஜெயலலிதா, வருத்தப்படுகிறேன். இது நடந்திருக்கக் கூடாது. எனது கவனத்திற்கு வந்திருந்தால் இதை சரி செய்திருப்பேன். நடந்ததற்காக வருத்தப்படுகிறேன் என்று கூறியது அவரது பெருந்தன்மையைக் காட்டியது. அவரது உணர்வை, எண்ணங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று ஸ்டாலின் கூறினார்.