டீ ஸ்டால், ஆலமரத்தடி, பஸ்பயணம்... 2015ல் ஸ்டாலினின் நமக்கு நாமே அவதாரம்
சென்னை: ஆள்பவர்களைப் பார்க்க மக்கள் கால்கடுக்க காத்திருந்த நிலை மாறி மக்களை சந்திக்க ஊர் ஊராக பயணித்தனர் அரசியல் கட்சித்தலைவர்கள். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்கள் பணி என்று மாவட்ட வாரியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப் போக, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 234 தொகுதிகளிலும் மக்களை சந்திக்க நமக்கு நாமே பயணம் கிளம்பினார்.
2016ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை மனதில் வைத்துதான் அரசியல் கட்சியினர் மக்களை சந்தித்து வருவதாக கூறப்பட்டாலும் 5முறை திமுக ஆண்டபோது இப்படி இறங்கி வராத ஸ்டாலின், தற்போது திடீரென மக்களை சந்திக்க வந்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய அரசியல் நோக்கர்கள், ஓட்டுக்காக நடக்கும் சினிமா சூட்டிங் என்றும் விமர்சனம் செய்தனர்.
சமூக வலைத்தளங்களில் ஸ்டாலினின் ஒவ்வொரு நிகழ்வையும் கிண்டல் செய்தனர். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் மூன்று கட்டமாக திருவள்ளூர் வரை நமக்கு நாமே பயணத்தை முடித்தார். சென்னையில் நவம்பர் மாதத்தில் தீபாவளிக்குப் பின்னர் மக்களை சந்திக்கப்போவதாக தெரிவித்தார் ஸ்டாலின். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் வரலாறு காணாத மழையும், பெருவெள்ளமும் ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தை முடக்கிப் போட்டு விட்டது. ஆனாலும் என்ன வெள்ள நிவாரணப் பணிகளை அளித்த ஸ்டாலின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூரில் மீண்டும் மக்களை சந்தித்தார்.
2016ல் ஜனவரி மாதம் 5ம்தேதி சென்னையில் நடைபெற உள்ள போராட்டத்திற்குப் பின்னர் மக்களை சந்திக்கப்போவதாக கூறியுள்ளார் ஸ்டாலின். மூன்று கட்ட நமக்கு நாமே பயணத்தின் ஹைலைட்ஸ் உங்களுக்காக.
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா
குமரியில் நமக்கு நாமே பயணம் தொடங்கிய ஸ்டாலின் திருநெல்வேலியில் இருட்டுக்கடையில் அல்வாகடையில் ஒரு இரவு நேரத்தில் அல்வாவை ருசித்துக்கொண்டே மக்களிடம் குறை கேட்டார்.
ஆட்டோ பயணம்
நமக்கு நாமே பயணத்தில் ஸ்டாலின் ஆட்டோவில் தொற்றிக் கொண்டு போனது அதிக அளவில் கிண்டலுக்கு ஆளானது. அதேபோல நூல் நூற்றதும், சைக்கிளில் பயணம் செய்ததும் அதிக அளவில் விமர்சனத்திற்கு ஆளானது.
ஆலமரத்தடி பஞ்சாயத்து
கிராமங்களில் ஆலமரத்தடி, அரசமரத்தடிகளின் நிழலில் ஸ்டாலின் அமர்ந்து மக்களிடம் குறை கேட்டது 2015ம் ஆண்டின் புது ஸ்டைல்.
ரோட்டோர டீக்கடை
ஸ்டார் ஹோட்டல்களில் மட்டுமே டீ குடித்து பழகியிருந்த ஸ்டாலின் முதன் முறையாக சாலையோட டீ கடைகளில் டீ குடித்துக்கொண்டே மக்களிடம் குறைகேட்டார். ஆனால் இது படப்பிடிப்புதான் என்றும் திமுகவின் கிரியேட்டிவ் டீம் இரு தினங்களுக்கு முன்பாகவே அந்தந்த இடங்களுக்குச் சென்று டீ தூள், டம்ளர் முதற்கொண்டு அந்த டீ கடைக்காரருக்கு கொடுத்து செட்அப் செய்து விடுவார்கள் என்றும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
ராமானுஜர் தரிசனம்
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் சௌமிய நாராயண பெருமாள் கோவிலுக்குப் போன ஸ்டாலின், கோபுரத்தின் மீது ஏறி ராமானுஜரை தரிசனம் செய்தார். இந்து கடவுள் மீதான கருணாநிதியின் முந்தைய விமர்சனத்திற்கு இடையே, ஸ்டாலின் திடீர் கோவில் பயணம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஸ்டார்ட் மியூசிக்
இரண்டாம் கட்ட பயணத்தின் போது மக்களிடம் அதிகம் நெருக்கம் காட்டினார் ஸ்டாலின். நீலகிரி மாவட்டத்தில் பயணத்தின் போது படுகர் இன மக்களுடன் இணைந்து ஸ்டாலின் ஆடிய நடனம்தான் செம...
செல்ஃபி சர்ச்சை
தன்னுடன் ஆசைப்பட்டு செல்பி எடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரின் கன்னத்தில் ஸ்டாலின் அறைந்தார் என்று வாட்ஸ்அப்பில் தகவல் பரவியது. அதை மார்பிங் என்று கூறிய ஸ்டாலின், அதே ஆட்டோ டிரைவரை தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வரவழைத்து ஆசை தீர செல்ஃபி எடுத்து அனுப்பி வைத்தார்.
திடீர் விவசாயி
ஸ்டாலின் தனது பயணத்தில் டிராக்டர் ஓட்டியும், ஏர் கலப்பையை பிடித்து உழுதும் விவசாயி அவதாரம் எடுத்தார். ஆனால் கறும்புக்காட்டிற்குள் சிமெண்ட் சாலையும், களத்து மேட்டில் பட்டுப்புடவை கட்டிய பெண்மணியை ஷூ காலுடன் சென்று சந்தித்தும் விமர்சனத்திற்கு ஆளானது.
மதுபாட்டில் கிப்ட்
போகும் இடமெங்கும் மாணவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார் ஸ்டாலின். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே
மேல்விஷாரத்தில் மாணவர்களின் கலந்துரையாடலின் நடுவே ஒரு மாணவி திடீரென எழுந்து, ஸ்டாலினிடம் ஒரு மது பாட்டிலை நீட்டி, ஒவ்வொரு ஊரிலும் உங்களுக்கு பரிசாக கொடுத்திருப்பாங்க. எங்க ஊர்ல சாராயம்தான் பிரபலம். இந்தாங்க என்று கொடுத்து அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
விளையாட்டுப்பிள்ளை
கிரிக்கெட், ஃபுட்பால் விளையாடுவது, சிலம்பம் சுற்றுவது என ஸ்டாலின் செய்த அட்ராசிட்டிகள் திமுகவினரை அதீத உற்சாகத்தில் ஆழ்த்தியது. வேன், சைக்கில், இருசக்கர வாகனம், சில நேரங்களில் நடை பயணம் மக்களை சந்தித்து குறைகேட்டுள்ளார் ஸ்டாலின்.
212 தொகுதிகள்
நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை குமரியில் தொடங்கி திருவள்ளூர் வரை 212 தொகுதிகளில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். நான்கரை ஆண்டுகளாக தமிழ்நாட்டில் காணொலி காட்சி ஆட்சி நடக்கிறது. நிர்வாகம் ஸ்தம்பித்து போய் விட்டது. அரசு துருப்பிடித்து இருக்கிறது. மாற்றத்தை ஏற்படுத்தவே இந்த பயணம் என்று கூறியுள்ள ஸ்டாலின் மீண்டும் நமக்கு நாமே பயணம் மூலம் சென்னை மக்களை சந்திக்கப் போகிறாராம். இனி என்னென்ன ஸ்டண்ட் அடிக்கப் போகிறாரோ?