காவிரி மேலாண்மை வாரியம்: இரட்டை வேடம் போடும் மத்திய அரசு: திண்டுக்கல் சீனிவாசன் சாடல்
ஸ்டாலின், கமல்,ரஜினி, வைகோ, ராமதாஸ் ஆகியோர் முதல்வர் பதவிக்கான கனவில் இருக்கிறார்கள் என்று திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
திண்டுக்கல் : எப்படியும் தமிழக முதல்வர் ஆகிவிட வேண்டும் என்கிற கனவில் ஸ்டாலின், கமல், ரஜினி, வைகோ, ராமதாஸ் ஆகியோர் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.
திண்டுக்கல்லில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிர்வாகிகளிடம் பேசினார்.
அப்போது அவர் அதிமுக ஆட்சி கலைந்துவிடும் என்னும் பேச்சை பொய்யாக்கி ஓராண்டைக் கடந்து ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட, இந்த ஆட்சியில் எதாவது தவறு கண்டுபிடிக்க முடியுமா என்று தேடிவருகிறார்கள்.
5 பேர் முதல்வர் கனவு
ஸ்டாலினுடன், கமல், ரஜினி, வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட ஐந்து பேர் தமிழக முதல்வர் ஆகும் கனவில் இருக்கிறார்கள். ஆனால், இது எப்போதும் நடக்கப்போவது இல்லை என்று அவர்களுக்கே தெரியும் என்று குறிப்பிட்டார்.
டிடிவி தினகரன்
டி.டி.வி தினகரன் கொள்ளையடித்த பணத்தில்தான் கட்சியே துவங்கியுள்ளார். அவர் கட்சி தொடங்கியதுமே நாஞ்சில் சம்பத் வெளியேறிவிட்டார். இன்னும் கொஞ்ச நாட்களில் அந்தக் கட்சி காணாமல் போகும்.
காவிரி மேலாண்மை வாரியம்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழக எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தையே 10 நாட்களுக்கும் மேலாக முடக்கிப் போராடிவருகிறார்கள். ஆனால், கர்நாடகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருப்பதால், காவிரி விஷயத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது.
மத்திய அரசுக்கு எதிராக பேச்சு
தமிழக முதல்வரும், துணை முதல்வரும் காவிரி மேலாண்மை வாரியத்தை பெற்றுத் தருவதில் முனைப்போடு இருக்கிறார்கள். விரைவில் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று அவர் கூறினார் திண்டுக்கல் சீனிவாசன். மத்திய பாஜக அரசை எதிர்த்து இப்போது அமைச்சர்கள் பலரும் பேசத்தொடங்கியுள்ளனர்.