கறுப்பு தினத்தில் கருப்பு சட்டை அணிந்து உரிமையை நிலைநாட்டுவோம் – ஸ்டாலின் அறிக்கை!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் அழைப்பை ஏற்று கறுப்பு தினத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐ.நா மன்றத்தில் ராஜபக்சே கலந்து கொள்ளும் செப்டம்பர் 25 இல் கருணாநிதியின் அழைப்பை ஏற்று கறுப்பு தினத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து தி.மு.க இளைஞர் அணியினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனநாயக வழியில் போராட்டம்:
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈழத் தமிழர் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயக வழியில் தொடர்ந்து பாடுபட்டு வருகின்ற இயக்கம் தி.மு.கழகம்.

உறுதியான முயற்சிகளில் கழகம்:
இலங்கையில் தக்க அரசியல் தீர்வு ஏற்பட்டு ஈழத்தமிழரின் அரசியல் உரிமைகளும், வாழ்வுரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியான முயற்சிகளைக் கழகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அனுமதிக்காத இலங்கை அதிபர்:
இதன் ஒருகட்டமாக, ஐ.நா மனித உரிமை ஆணையத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவினரையே அனுமதிக்க மறுத்த இலங்கை அதிபர் ராஜபக்சேவோ அல்லது அந்த நாட்டின் எந்தவொரு பிரதிநிதியோ ஐ.நா. அவையில் பேசுவதற்கு அனுமதிக்கக் கூடாது என 26.8.2014 அன்று தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையிலான "டெசோ" அமைப்பின் தீர்மானம் மூலமாக ஐ.நா. மன்றத்தை வலியுறுத்தியது. எனினும் ஐ.நா. மன்றமோ , இந்தியாவின் மத்திய அரசோ இதற்குச் செவி மடுக்கவில்லை.

மனித உரிமை மீறல்கள்:
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், தமிழ் இனப் படுகொலைகள் இவற்றிற்காக ஐ.நா. மன்றம் மூலமாக சர்வதேச விசாரணையை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ள ஒருவர், அதன் விசாரணைக் குழுவையே தனது நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்த நிலையில் அவரையே அந்த ஐ.நா. மன்றத்தில் உரையாற்ற அனுமதிப்பது என்பது சர்வ தேசச் சட்டங்களை மீறிய குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பது போன்றதாகும்.

கறுப்பு தினமாக கடைபிடிப்பு:
இதனை அனுமதிக்கக் கூடாது என "டெசோ" சார்பில் தலைவர் கலைஞர் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றியதுடன், பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினார். எனினும் இதுகுறித்து மத்திய அரசும், ஐ.நா. மன்றமும் உரிய நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாத நிலையில் செப்டம்பர் 25 அன்று ஐ.நா.வில் ராஜபக்சே உரையாற்றுவதற்கு தாய்த் தமிழகத்தின் முழுமையான எதிர்ப்பை ஆழமாகப் பதிவு செய்யும் விதத்தில், அன்றைய தினத்தை "கறுப்பு தின" மாகக் கடைபிடிக்கும்படி தலைவர் கலைஞர் அவர்கள் நமக்கு ஆணையிட்டுள்ளார்.

செப்டம்பர் 25இல் கண்டன போராட்டம்:
கழகத்தின் இளைஞர் அணி சார்பிலும் "கறுப்பு தினம்" குறித்து பொதுமக்களுக்கு விளக்கிப் பெருமளவில் பங்கேற்கச் செய்யும் விதத்தில் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அப்பணியில் இளைஞர் அணியினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, செப்டம்பர் 25 அன்று நம் கண்டனத்தையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் வகையில் கறுப்புச் சின்னம் அணிந்தும், கறுப்புச் சட்டை அணிந்தும், தங்கள் பகுதியில் கறுப்புக் கொடி ஏற்றியும் கறுப்பு நாளைக் கடைப்பிடித்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

உலகத் தமிழர்களின் வெளிப்பாடு:
உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வைக் கழகம் பிரதிபலிக்கிறது என்பதன் வெளிப்பாடாகத் தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களையும் இளைஞர்களையும் இந்தக் கறுப்பு தினத்தில் பங்கேற்கச் செய்யுங்கள். ஈழத்தமிழர்களுக்காக நம் உள்ளத்தில் பதிந்திருக்கும் வேதனை, உடை மூலமாக வெளிப்படட்டும். காற்றில் அசையும் கறுப்புக்கொடிகள் நம் கண்ணீரைச் சொல்லும் அடையாளமாக அமையட்டும். அவை இந்திய அரசுக்கும் - ஐ.நா. மன்றத்திற்கும் - சர்வதேச அரங்கிற்கும் தமிழர்களின் ஒட்டுமொத்த கண்டன உணர்வைப் புரிய வைக்கட்டும்" என்று தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications