ஸ்டாலின் மீட்டிங்கில் புகார் பெட்டி... அன்பகத்தில் பாதுகாப்பு - கதி கலங்கும் மாஜிக்கள்
திமுக நிர்வாகிகளுடன் கள ஆய்வு தொடங்கி விட்டார் செயல் தலைவர் ஸ்டாலின். நிர்வாகிகள் பேசுவதை விட தீர்வு காணும் பெட்டியில் போடப்படும் கடிதங்கள்தான் மாஜிக்களை கதி கலங்க வைத்துள்ளது.
சென்னை: திமுக செயல்தலைவர் ஸ்டாலின், கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் பிப்ரவரி 1ஆம் தேதியன்று அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை தொடங்கியுள்ளார். மாவட்டவாரியாக ஆய்வு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டிதான் மாஜிக்களை கதி கலங்க வைத்துள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டம் பரபப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை கூடவே ஐடி கம்பெனி நிர்வாகிகள் போல டேக் போட்டு அசத்தலாக வலம் வருகின்றனர்.
ஸ்டாலின் உடன் நெருக்கமான பேச கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மனதில் இருப்பதை கொட்டி விட வேண்டும் என்றும் உற்சாகமாக வலம் வரும் உடன் பிறப்புக்கள் மனதில் உள்ளதை புகார் பெட்டியில் கடிதமாக போட்டு விட்டு செல்கின்றனர்.
நிர்வாகிகளுடன் கள ஆலோசனை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டெப்பாசிட்டை இழந்தது. இதையடுத்து கட்சி நிர்வாகிகளுக்கும் தலைமைக்கும் இடையே இடைவெளி இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. இந்த குறையை போக்கவே ஆலோசனை கூட்டத்தை ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
இரண்டாம் கட்ட தலைவர்கள்
திமுகவில் மாவட்ட செயலாளர்களும், மாஜி அமைச்சர்களும் குறுநில மன்னர்கள் போல செயல்படுகிறார்கள் என்பது தொண்டர்களின் குற்றச்சாட்டு கட்சி நிர்வாகிகளாக இருப்பவர்கள் கட்சியினருடன் தொடர்பில்லாமல் இருக்கின்றனர். அதனை சரி செய்யவும் இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்படுவதாக கூறப்பட்டது.
அரசியலுக்கு வரும் நடிகர்கள்
ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால், திமுகவுக்கு எந்த வகையான பாதிப்பு இருக்கும். திமுகவிற்கு இளைஞர்கள் புதியதாக வருகிறார்களா? அவர்களை வருவதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பது உள்பட பல விஷயங்கள் குறித்து இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பேசப்படுகிறதாம்.
பேர் சொல்லி அழைக்கும் ஸ்டாலின்
கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள் பற்றிய லிஸ்ட் எல்லாமே ஸ்டாலின் முன் உள்ள லிஸ்டில் இருக்கிறது. அதை வைத்து பேரைச்சொல்லி பேச அழைக்கிறார் ஸ்டாலின். பேச வாய்ப்பு கிடைக்காதவர்கள் தங்களின் மனதில் உள்ளதை கடிதமாக எழுதி தீர்வு காணும் பெட்டியில் போடலாம்.
அன்பகத்தில் பாதுகாப்பு
இந்த புகார் பெட்டி அறிவாலயத்தில் இருந்து அன்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே பாதுகாப்பாக வைக்கப்படும். அன்பகம் கலை பாதுகாப்பில் இந்த கடிதங்கள் வைக்கப்பட்டுள்ளன. புகார்களை படிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதை படித்து மொத்தமாக ஸ்டாலினிடம் தெரிவிப்பார்கள். இந்த குழுவில் இருப்பவர்கள் யார் யார் என்று கட்சியின் மூத்த தலைவர்களுக்கே தெரியாதாம்.
அறுவை சிகிச்சை
பிப்ரவரி 1ஆம் தேதி இன்று முதல் மார்ச் 22ஆம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.
ரகசியமாக தீர்வு காணும் பெட்டியில் போடப்படும் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகளின் அடிப்படையில், கட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கபூர்வமான செயல்பாடுகளையும், அவசியமாகச் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை முறைகளையும் மேற்கொள்ள உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கலக்கத்தில் மாஜிக்கள்
தீர்வு காணும் பெட்டியில் உள்ள கடிதம் யாரை குறி வைத்து எழுதப்பட்டுள்ளதோ? யாருடைய தலை உருளுமோ என்று மாஜிக்கள் கலக்கத்தில் உள்ளனர். அறிவாலயத்தில் இருந்து அன்பகத்திற்கு செல்ல உள்ள புகார் பெட்டியை நினைத்து திகிலடித்து போய்தான் இருக்கிறார்களாம்.