மரம் விழுந்த இடங்களில் மரம் நட்டு வையுங்கள்.. மு.க.ஸ்டாலினின் புத்தாண்டு கோரிக்கை
சென்னை: புத்தாண்டின் தொடக்கமாக தனது வீட்டைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் வர்தா புயல் காரணமாக மரம் விழுந்த இடங்களில் புதிய மரக் கன்றுகளை நட்டு வைத்ததாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தனது முகநூல் புத்தகத்தில் அவர் எழுதியுள்ளதாவது:
புத்தாண்டின் தொடக்கமாக இன்று காலை எனது வீட்டை சுற்றியிருக்கும் பகுதிகளில் மரங்கள் விழுந்த இடங்களில் புதிய மரக்கன்றுகளை நட்டு வைத்தேன். இந்த மகிழ்ச்சியான நேரத்தில் பொது மக்களுக்கும், கழக தோழர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.

கடந்த ஆண்டு நிகழ்ந்த பேரிடர்களால் நாம் கணக்கில் அடங்காத மரங்களை இழந்திருக்கிறோம். குறிப்பாக "வர்தா" புயலின் போது வீழ்ந்த மரங்கள் எல்லாம் "குவியல் குவியலாக" கிடப்பதைப் பார்த்தோம்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க நம்மால் முடிந்த வரை மரக்கன்றுகளை நடுவதோடு, அவற்றை பாதுகாத்து,பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நாம் அனுபவிக்கும் இயற்கை செல்வங்களை நம் வருங்கால சந்ததியினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.
ஆகவே இந்த மரக்கன்றுகள் நடும் பணியை ஒவ்வொருவரும் "புத்தாண்டு உறுதிமொழியாக" எடுத்துக் கொண்டு, நாட்டின் இயற்கை செல்வத்தை காப்பாற்ற முன் வர வேண்டும் என்று கழக தோழர்களையும், பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications