அறிக்கையாக வாசிக்கிறாரே ஒழிய செயல்பாட்டைக் காணோமே.. ஜெ. மீது ஸ்டாலின் தாக்கு
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு 40,000 கோடி ரூபாய்க்கான திட்டங்களை அறிவிப்போடு நிறுத்தி விட்டார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொளத்தூர் எம்.எல்.ஏவான ஸ்டாலின் இன்று தனது தொகுதியில், தொகுதி மேம்பாட்டு நிதியின் கீ்ழ் ரூ. 1 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு நலத்திட்டப் பணிகள் நடைபெற்றன. இன்றைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ள நான்கு பணிகளுக்கு ரூபாய் 1 கோடியே 5 லட்சத்து 86 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது. இதுவே கடந்த மூன்று ஆண்டுகளில் என்று எடுத்துக் கொண்டால், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செலவிடப் பட்ட தொகை ரூபாய் 1 கோடியே 25 லட்சத்து 98 ஆயிரம் ஆகும்.

நான் கட்டிடங்களை திறந்து வைக்கின்றேன் என்று அறிந்த சென்னை மாநகராட்சி மேயர் பொதுமக்களைச் சந்தித்து கருத்தாய்வு கூட்டம் என்ற பெயரில் வேடிக்கையான நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியிருக்கிறார். அதில் வில்லிவாக்கத்தையும் கொளத்தூரையும் இணைக்கும் ஒரு சுரங்கப் பாதை, நான் மேயராக இருந்தபோது தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 36 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. அந்த சுரங்கப் பாதையை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
அதற்குப் பக்கத்திலேயே இன்னொரு சுரங்கப் பாதையின் லெவல் கிராசிங்-1 சுரங்கப்பாதை கழக ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டு, அப்போது மேற்கண்ட வில்லிவாக்கச் சுரங்கப் பாதை நடைபெற்றுக் கொண்டிருந்ததால், லெவல் கிராசிங் சுரங்கப்பாதையின் பணிகள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் என்று எண்ணி கட்டுமானப் பணிகள் தள்ளிப் போடப்பட்டது.
தற்போதைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மாநகராட்சி பொறுப்பு ஏற்ற மூன்று ஆண்டுகள் ஆனபிறகும் இதுவரை, தள்ளிப் போடப்பட்ட பணியை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கை எடுக்காமல், நேற்று திடீரென்று ஆய்வுகள் மேற்கொண்டிருப்பதாக மேயர் அறிவித்திருக்கிறார்.
கடந்த 3 ஆண்டுகளில் எந்தவொரு மேம்பாலமோ, சுரங்கப்பாதையோ கட்டும் பணியை மேற்கொள்ளாமல், ஜெயலலிதாவைப் போலவே இவரும் வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு 40,000 கோடி ரூபாய்க்கான திட்டங்களை அறிவிப்போடு நிறுத்தி விட்டதைப் போல், மாநகராட்சி மேயரும் முதல்வரைப் பின்பற்றி வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு, சென்னை மாநகர மக்களை ஏமாற்றி வருகிறார் என்றார்.
முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications