மெட்ரோ ரயிலில் பயணித்த மு.க. ஸ்டாலின்
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் உற்சாக பயணம் மேற்கொண்டார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். அப்போது பொதுமக்கள், மாணவர்கள் ஆகியோர் ஸ்டாலினுடன் உற்சாகமாக பேசியதோடு ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சென்னை வாழ் மக்களின் நீண்ட நாள் கனவான மெட்ரோ ரயில் சேவை, கடந்த 29ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது.
ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை போக்குவரத்து நடந்து வருகிறது. இந்நிலையில் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் இன்று காலை, கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரை மெட்ரோ ரயிலில் பயணித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் அரசியல் காரணங்களுக்காக இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டாலும், இறுதியில் மெட்ரோ ரயிலுக்காக நீண்ட நாள் காத்திருந்த சென்னை மக்களின் ஆசை இன்று நிறைவேறியுள்ளது என்றார்.
மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்களுடன் நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர்கள் மெட்ரோ ரயிலில் கட்டணம் அதிகம் என்று தெரிவித்தனர். எனவே கட்டணத்தை குறைக்க நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றும் என்னிடம் கேட்டுக்கொண்டனர் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
மெட்ரோ ரயில் இயக்கப்படுவதால் சென்னை மாநகர மக்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். பயணிகளின் பயண நேரம் குறையும். மக்கள் மாசற்ற காற்றை சுவாசிக்க முடியும். மக்கள் போக்குவரத்து நெருக்கடியால் படும் சிரமங்களைப் போக்க முடியும்.
மெட்ரோ ரயில் திட்டத்தை சென்னை முழுவதும் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்ய வேண்டும். அத்துடன் மாநிலத்தின் உள்ள பிற நகரங்களையும் இந்த மெட்ரோ ரயில் சேவையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.