ஸ்டாலின், விஜயகாந்த், திருமாவளவன் இன்று வேட்புமனு தாக்கல் !
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் அவரவர் போட்டியிடும் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
தமிழக சட்டசபைக்கு மே 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 22 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதேபோல் திருவாரூர் தொகுதியில் மீண்டும் 2வது முறையாக போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி அதே நாளில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் போட்டியிடும் பாமக இளைஞரணி செயலாளரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான, அன்புமணி ராமதாசும் நேற்று முன்தினம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட அயனாவரத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிடம் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் 1 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
உளுந்தூர்பேட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பகல் 12 மணியளவில் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவரான தொல்.திருமாவளவன் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுகிறார். 2001 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அவர், அதன் பிறகு 15 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக
காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்யகிறார்.