முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்ப வேண்டும் - அப்பல்லோவில் ஸ்டாலின்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற்று அவரது பணிகளை தொடர வேண்டும் என திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந் தேதி இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் நீண்ட நாட்கள் தங்கி ஜெயலலிதா சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு தலைவர்கள் தொடர்ந்து வருகை தருகின்றனர். நேற்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தார். அவர் அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று இரவு 7.10 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரும் வந்தனர்.
பின்னர் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதி உத்தரவின் பேரில் முதல்வரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தேன். முதலமைச்சரை சந்திக்க முடியவில்லை என்றாலும் அமைச்சர்களை சந்தித்தேன். நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரிடம் முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். மருத்துவர்களிடமும் விசாரித்தேன். முதல்வர் விரைவில் குணமடைந்து அவரது பணிகளை தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.