காவிரி பிரச்சனைக்காக சிறப்பு சட்டசபை- ஸ்டாலின் கூட்டிய விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்!
சென்னை: காவிரி பிரச்னை தொடர்பாக சிறப்பு சட்டசபை கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஆளும்கட்சி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
ஆனால் ஆளும்கட்சி சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதையடுத்து அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டது.
இன்று ஆலோசனை கூட்டம்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
காங்கிரஸ் பங்கேற்பு
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி பிரிவு தலைவர் ஆவடி பவன்குமார், பலராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துரைமாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சண்முகம், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் தெய்வசிகாமணி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் திருச்சி அய்யாக்கண்ணு, காவிரி டெல்டா பாசன சங்கம் சார்பில் பாலு தீட்சிதர். ஐக்கிய ஐனதா தள விவசாய பிரிவு தலைவர் ஹேமநாதன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
அனைத்து கட்சிக் கூட்டம்
இதில் காவிரி பிரச்சனையில் தமிழக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் என்பதை மத்திய அரசுக்கு தெளிவாக உணர்த்தவும், உச்சநீதிமன்ற உத்தரவுகளை கர்நாடக அரசு மதிக்கவில்லை என்பதை கண்டிக்கும் வகையிலும், தமிழக அரசு உடனடியாக முன்வந்து அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி, அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனைகளையும் கேட்டறிந்து தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்;
சிறப்பு சட்டசபை கூட்டம்
தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்டி இந்த பிரச்சினை குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும்.
பிரதமரை சந்திக்க வேண்டும்
அனைத்துக் கட்சி தலைவர்களையும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமரை சந்தித்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.