ஸ்டாலினால் அறிவாலயத்தைத்தான் பிடிக்க முடியும்... ஆட்சி கிடைக்காது: விஜயகாந்த் 'அட்டாக்'!
ஆரணி: திமுக பொருளாளர் ஸ்டாலின் அறிவாலயத்தைப் பிடிக்கலாம், ஆனால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக வேட்பாளர் ஆர்.எம்.பாபுமுருகவேலை ஆதரித்து ஆரணியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த்.
அப்போது அவர் பேசியதாவது:-
தேமுதிகவிலிருந்து நிர்வாகிகள் சிலர் விலகினாலும் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
நான் நடிகர் சங்கத்தலைவராக இருந்தபோது நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தேன். எனக்கு வாக்களித்து வெற்றி பெறவைத்து முதல்வராக்கினால் அதிமுக, திமுகவினர் வைத்துள்ள நாட்டின் கடனை உங்கள் ஒத்துழைப்புடன் அடைப்பேன்.
அதிமுக என்னை பயமுறுத்தினால் நான் பயப்பட மாட்டேன். எங்கள் கட்சிக்காரர்கள் மிலிட்டரிகள். நாங்கள் பயப்படமாட்டோம்.
ஸ்டாலினால் அப்பாவையும், அண்ணனையும் ஏமாற்றி அறிவாலயத்தை பிடிக்கலாம். ஆனால் ஆட்சியைப் பிடிக்க முடியாது. அன்று வெள்ளைக்காரர்களை வெளியேற்ற மக்கள் ஒன்று கூடினார்கள் இன்று கொள்ளைக்காரர்களை வெளியேற்ற 6 பேர் ஒன்றாக சேர்ந்திருக்கிறோம்.
இந்த விஜயகாந்த்தை நம்புங்கள். 6 கட்சிகள் கூட்டணி சேர்ந்து எனக்கு 234 தொகுதிகளிலும் வெற்றியை கொடுப்பார்கள்' என அவர் தெரிவித்தார்.