தலையில் தோல் இல்லாமல் வந்த பெண்ணை குணப்படுத்திய ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள்
சென்னை: மின்விசிறியில் தலைமுடி சிக்கியதால் தோலுடன் முடி இழுக்கப்பட்டு வந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து அவரை பழைய நிலைக்கு கொண்டு வந்துள்ளனர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள்.

இது குறித்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண், தான் வேலை பார்க்கும் இடத்தில் நடந்த விபத்தில் உயர் அழுத்த மின்விசிறியில் தனது தலைமுடி சிக்கியதால் தலைமுடியுடன் சேர்த்து தோல் சிதைந்து இழுக்கப்பட்டு ரத்தக்கசிவு அதிகமாகி மயங்கிய நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
சுமார் இரண்டு மணிநேரத்திற்கு பின் மருத்துவமனைக்கு வந்தவரை குருதி வழங்கி முதலுதவி செய்து அறுவை சிகிச்சைக்கு தயார்படுத்தப்பட்டார். ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைப் பகுதியில், நுண் ரத்தநாள அறுவை சிகிச்சை சுமார் 4 மணிநேரம் நடைபெற்றது. பிறகு உள் நோயாளி சிகிச்சை, தொடர் சிகிச்சையை தொடர்ந்து அறுவை சிகிச்சை வெற்றி பெற்றது.

பிறகு வெளி நோயாளி சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளார். இது போன்ற நுண் ரத்த நாள அறுவை சிகிச்சையின் பலனானது அறுவை சிகிச்சைக்குப் பின் நீண்ட நாட்களுக்குப் பிறகு தான் அறிய வரும்.

அவ்வகையில் இந்த பெண்மணிக்கு இந்த அறுவை சிகிச்சை முழு வெற்றியடைந்து மீண்டும் பழைய நிலைக்கு வந்துள்ளார். பெண்களின் கூந்தல் மிக முக்கிய அமைப்பானதாக கருதப்படும் சமுதாயத்தில் முழுவதுமாக தோலுடன் சேர்ந்து சிதைந்த நிலையில் வந்த இந்த பெண்ணிற்கு நுண் ரத்த நாள அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து மீண்டும் பழைய நிலைக்கு வித்திட்டமைக்கு இவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனையில் இதற்கு ரூ.3 லட்சம் செலவாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications