குலுக்கல் முறையில் ஹஜ் பயணிகள் தேர்வு: தமிழக அரசு தகவல்
சென்னை: ஹஜ் செல்ல விண்ணப்பித்துள்ள தமிழக பயணிகளை தேர்வு செய்ய இன்று குலுக்கல் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஹஜ்' 2017-க்காக சுமார் 13 ஆயிரத்து 584 (20 குழந்தைகள் உள்பட) விண்ணப்பங்கள், ஹஜ் பயணிகளிடமிருந்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவால் பெறப்பட்டுள்ளன.
எனவே, ஹஜ் 2017-க்கான ஹஜ் பயணிகளை குலுக்கல் முறை (குறா) மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவு செய்ய வேண்டும் என்று மாநில ஹஜ் குழுவை இந்திய ஹஜ் குழு, மும்பை கேட்டுக்கொண்டுள்ளது.
மும்பை, இந்திய ஹஜ் குழு கேட்டுக்கொண்டபடி, ஹஜ் பயணிகளை குலுக்கல் (குறா) முறை மூலம் தெரிவு செய்ய தமிழ்நாடு மாநில ஹஜ் குழு முடிவு செய்துள்ளது. இக்குலுக்கல் நிகழ்ச்சி இன்று காலை 10.30 மணி அளவில் சென்னை, ராயப்பேட்டை, புதுக்கல்லூரியிலுள்ள ஆனைக்கார் அப்துல் சுக்கூர் அரங்கத்தில் நடைபெறும்.
ஹஜ் 2017-க்காக, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலமாக விண்ணப்பித்துள்ள புனித பயணிகள் இக்குலுக்கலில் (குறாவில்) கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.