நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தமிழக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிபதி மாண்புமிகு கிருபாகரன் அவர்கள், 'உள்ளாட்சித் தேர்தல்தான் ஜனநாயகத்தின் ஆணிவேர்; ஆணிவேர் சரியாக இருந்தால்தான் ஜனநாயகம் வலுப்பெறும்; புதிய அரசு ஆணை வெளியிட்டு, டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்' என்று தீர்ப்பு அளித்து இருக்கின்றார்.

இத்தேர்தல் குறித்து உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், செப்டம்பர் 16-ஆம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைச் செயலாளர் வெளியிட்டுள்ள அரசு ஆணையில் சுழற்சி அடிப்படையில் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட வேண்டிய இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது; எனவே, பழங்குடி இனத்தவர்கள் மற்றும் அந்தப் பிரிவைச் சார்ந்த பெண்களுக்கு உள்ளாட்சிகளில் பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெறாமல் ஒதுக்கப்பட்டுள்ளனர்;
செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு ஆணையிலும் இட ஒதுக்கீடு சுழற்சி முறையில் வழங்கப்படவில்லை. எனவே, தேர்தல் அறிவிப்பு ஆணையை ரத்து செய்து, பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க உத்திரவிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான மூன்று அரசு ஆணைகளையும் ரத்து செய்து உத்திரவிட்டுள்ளது. எனவே, நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications