மக்கள் நலனில் அக்கறை காட்டாத ஜெ.,வுக்கு சட்டமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்: விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல், கடமை தவறி, சுயநல அரசியலும், ஆட்சியும் நடத்தும் ஜெயலலிதாவிற்கு, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

காவிரி டெல்டா அல்லாத மாவட்டங்களில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்கப்படுமென, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகள் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டுமென பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும், செவி சாய்க்காத அதிமுக அரசு தற்போது திடீரென விவசாயிகள் நீண்ட தூரம் பயணம் செய்யாமல், உற்பத்தி செய்த நெல்லை விற்பனை செய்யமுடியுமென வியாக்கியானம் கூறி, தமிழக சட்டமன்ற தேர்தலை மனதில்கொண்டு, விவசாயிகளை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பெறவேண்டும் என்கின்ற நோக்கத்தில் மட்டுமே, கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிட்டுள்ளது.

statement issued by dmdk leader Vijayakanth

ஏற்கனவே நெல் கொள்முதலுக்கு வழங்கக்கூடிய தொகையான ரூபாய் 1,460 மற்றும் 1,520 என்பது கட்டுபடியாகவில்லை என்றும், அதனால் அதனை உயர்த்தி வழங்கவேண்டும் என்றும் விவசாயிகள் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் "செவிடன் காதில் ஊதிய சங்காக" இந்த அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. நெல் கொள்முதலுக்கு விலையை உயர்த்தி வழங்க மனமில்லாத அதிமுக அரசு விவசாயிகளை ஏமாற்றவே கூடுதல் நெல்கொள்முதல் நிலையம் என அறிவித்துள்ளது.

மேலும் கடந்த 24.01.2016 அன்று "டெல்டா மாவட்டங்களில் கூடுதலாக நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவேண்டும்" என்பது குறித்தும், நெல் கொள்முதலில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்தும் நான் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால் இதுவரையிலும் அதற்குரிய தீர்வு காணப்படவில்லை. ஆனால் அதற்கு மாறாக தற்போது கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு, குவிண்டாலுக்கு ஐம்பது முதல் நூறு ரூபாய் வரை அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்படும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தாத அதிமுக அரசு, டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகளின் நலனிலா அக்கறை செலுத்தப்போகிறது.

விவசாய நிலங்களில் "கெயில் நிறுவனத்தால்" எரிவாயு குழாய் பாதிக்கும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுக்கு ஒன்றுக்கு இருமுறை உச்சநீதிமன்ற நீதியரசர்கள் கால அவகாசம் அளித்தும், விவசாயிகளின் மீது துளியும் அக்கறை இல்லாமல், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜர் ஆகாமல் இருந்ததன் விளைவே, ஏழு மாவட்டத்திலுள்ள 134 கிராமங்களை சார்ந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே உச்சநீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவிற்காக ஐந்து மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட சுமார் 25க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்ற விசாரணையின்போது ஆஜரானதாகவும், ஆனால் "கெயில் நிறுவன" வழக்கிலும், "ஜல்லிக்கட்டு" வழக்கிலும் உரிய அக்கறை செலுத்தாமல் அதிமுக அரசு இருந்ததாக சட்டவல்லுனர்கள் பலரும் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த அக்கறையை "கெயில்" மற்றும் "ஜல்லிக்கட்டு" வழக்குகளில் காட்டியிருந்தால் உச்சநீதிமன்ற தீர்ப்பின் போக்கே மாறியிருக்கும்.

பொது நலனை பேணவேண்டிய பதவியில் இருந்துகொண்டு, அதில் அக்கறை செலுத்தாமல், கடமை தவறி, சுயநல அரசியலும், ஆட்சியும் நடத்தும் ஜெயலலிதாவிற்கு, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் அதிமுக அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.

அதே பாணியில் உணவை உற்பத்தி செய்யும் உழவர்களையும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏமாற்றி வருவதைப் பார்க்கும்போது "போயும், போயும் மனிதனுக்கு இந்த புத்தியை கொடுத்தானே" என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது. எல்லோரையும், எல்லா நாளும், எப்போதும் ஏமாற்ற முடியுமெனக் கருதும் அவருக்கு, தமிழக விவசாயிகள் தக்க சமயத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+