கணவனின் மகளை கொடுமைப்படுத்திய சித்தி மற்றும் அவரது தாய் கைது!
நீலகிரி: நீலகிரியில் தாய் இல்லாத சிறுமியை அடித்து துன்புறுத்திய, சித்தி மற்றும் சித்தியின் தாய் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ரபீக் என்பவரின் மகள் ரோஷ்மா என்ற சிறுமி, உடலில் பலமான காயங்களுடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டம், நடுவட்டத்தை சேர்ந்த அந்த சிறுமியின் தாய் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டதாகவும், அதன் பின் தந்தை இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தாயை இழந்த தன்னை, "தந்தையிடம் பேசக்கூடாது, அவரிடம் பணம் கேட்கக்கூடாது" என தந்தையின் இரண்டாம் மனைவி தவுலத், அவரது தாய் ஜான்பேட்டி ஆகிய இருவரும் அடித்து துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஈரோடு போலீசார் நீலகிரி மாவட்டம், நடுவட்டம் போலீசாருக்கு மாணவியின் வாக்குமூலத்தை அனுப்பி குறிப்பிட்ட இருவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொண்டனர்.
இதைதொடர்ந்து, தவுலத், ஜான்பேட்டி ஆகிய இருவர் மீதும் நடுவட்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.