ஸ்டெர்லைட் படுகொலை: சென்னையில் மீனவர்கள் போராட்டம்.. முதல்வரின் வாகனத்தை மறிக்க முயற்சி
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் நேற்று தூத்துக்குடியில் நடந்த படுகொலை சம்பவத்திற்கு எதிராகவும் சென்னையில் மீனவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
Recommended Video
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் நேற்று தூத்துக்குடியில் நடந்த படுகொலை சம்பவத்திற்கு எதிராகவும் சென்னையில் மீனவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சென்னை மெரினா கடற்கரை சாலையில் முதல்வர் பழனிச்சாமி செல்லும் வாகனத்தை மறிக்க மீனவர்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. போலீசின் இந்த கண்மூடித்தனமான தாக்குதல் காரணமாக இதில் 12 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் இதைவிட அதிக பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலர் மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர். பெண்கள், மாணவர்கள், சிறுவர்கள் என்று பார்க்காமல் போலீஸ் கண்முடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த மோசமான அரசு படுகொலை காரணமாக தமிழகமே கொதித்துப் போய் உள்ளது.இந்த நிலையில் இதற்கு எதிராக தமிழகம் முழுக்க போராட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் நேற்று தூத்துக்குடியில் நடந்த படுகொலை சம்பவத்திற்கு எதிராகவும் சென்னையில் மீனவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தூத்துக்குடி படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்திவருகிறார்கள்.காலையில் இருந்து சென்னை மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் முதல்வர் பழனிச்சாமி செல்லும் வாகனத்தை மறைக்க மீனவர்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.முதல்வரின் கான்வாயை மறைத்து போராட்டம் நடத்த மீனவர்கள் முயற்சி செய்து இருக்கிறார்கள்.
இதனால் மெரினா கடற்கரை சாலைக்கு செல்ல பிற மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் போலீசாருடன் அயோத்தியாகுப்பம் மக்கள் வாக்குவாதம் செய்து வருகிறார்கள். போலீசாருக்கும் மீனவர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.