இவங்கெல்லாம் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றப் புறப்பட்டவங்கன்னு நினைச்சீங்களாக்கும்!
ஆயிரம் ரூபாயை செல்லாமல் போனா எங்களுக்கு என்ன? எங்க அம்மா சீக்கிரம் வீடு திரும்பி வரணும் என்பதே அதிமுக தொண்டர்களின் வேண்டுதலாக உள்ளது.
சென்னை : இந்தியாவில் உள்ள பலகோடி மக்கள் வங்கி வாசலிலும், ஏடிஎம் வாசலிலும் பணத்தை மாற்ற வரிசையில் நின்றிருக்க, அதிமுக தொண்டர்களோ, அப்பல்லோ வாசலில் ஜெயலலிதா வருகைக்காக காத்திருக்கின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா விரைந்து உடல் நலமடைய வேண்டி, தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களும், அமைச்சர்களும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
தொண்டர்களில் பலர், முதல்வர் உடல் நலமடைய வேண்டி மொட்டையிடுவதாக பிரார்த்தனை செய்து கொண்டனர். இந்நிலையில், அப்பல்லோவில் சிகிச்சையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக செய்திகள் வெளியானது.
தான் மறுபிறவி எடுத்திருப்பதாகவும், நலமுடன் உள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை, அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
திருவள்ளூரைச் சேர்ந்த எம்ஜிஆர் மன்ற பிரமுகர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிமுக தொண்டர்கள், முதல்வர் உடல் நலமடைந்ததற்காக கெங்கை அம்மன் திருக்கோயிலில் மொட்டையிட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
அனைவரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து, தீபம் ஏற்றி முதல்வர் இருந்த அறையை நோக்கி சுற்றினர். முதல்வர் விரைவில் வீடு திரும்ப பிரார்த்தனை செய்து கொண்டனர்.