சிவகாசியில் விஜயகாந்த் பேசிய போது கல்வீச்சு - பரபரப்பு
பட்டாசு தொழிலை பாதுகாக்கக் கோரி போராட்டம் நடத்திய போது விஜயகாந்தை நோக்கி சிலர் கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசி: சிவகாசியில் பட்டாசு தொழிலை பாதுகாக்கக் கோரியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து விஜயகாந்த் பேசிய போது மேடையை நோக்கி சிலர் கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டாசு தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வலியுறுத்தி சிவகாசியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையை நம்பித்தான் தொழிலாளர்கள் வாழ்ந்துகொண்டு வருகிறார்கள். பொதுநல வழக்கு என்ற பேரில் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. பட்டாசு வியாபாரிகள் தொழிற்சாலைகளுக்கு முன்பணம் செலுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழங்கவில்லை.
வழங்காத காரணத்தினால் பட்டாசு தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. இதை நம்பி இருக்கும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
மத்திய அரசும் தமிழக அரசும் தொழிலாளர்களுடைய பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் தொழிலாளர்களுடைய வாழ்வாதாரமே கேள்விக் குறியாக உள்ளது.
உடனே இந்த பிரச்சினையை தீர்க்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் இன்று காலையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் பங்கேற்று பேசிய விஜயகாந்த் தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதாக கூறினார். அம்மா வழி என கூறி ஆட்சியாளர்கள் கோடி கோடியாக லஞ்சம் வாங்குவதாக கூறினார். மத்திய அரசின் அனுமதியுடன் தான் சீனப்பட்டாசு இறக்குமதி செய்யப்படுவதாக கூறினார்.
விஜயகாந்த் பேசிய போது திடீரென சிலர் மேடையை நோக்கி கற்களை வீசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கேடி என்று கூறி பேசியதால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் கற்களை வீசினார்களா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications