“நீ கோயிலுக்கு போ..” தம்பியை அனுப்பிவிட்டு பத்தாம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு! ஐயோ..!
கரூர் : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால், மனமுடைந்த மாணவர் ஒருவர், தனது தம்பியை கோவிலுக்குப் போகச் சொல்லிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 9 லட்சத்து 14 ஆயிரத்து 320 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிருந்தனர். இந்நிலையில் இன்று வெளியான தேர்வு முடிவுகளின்படி தமிழ்நாட்டில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 91.39%.

கரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 188 பள்ளிகளைச் சார்ந்த 5891 மாணவர்கள், 5890 மாணவிகள் என மொத்தம் 11,781 பேர் தேர்வில் பங்கேற்றனர். இதில், 5200 மாணவர்கள், 5579 மாணவிகள் என மொத்தம் 10779 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 91.49 சதவிதம்
இந்நிலையில் கரூரில் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்ததால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவனின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சின்னமலபட்டி பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மகன் சிவா, பழைய ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் பத்தாம் வகுப்பில் அவர் தேர்ச்சி பெறவில்லை.
இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். இன்று மதியம் வீட்டில் தனது தம்பியுடன் இருந்த சிவா, தனது தம்பியை அருகில் உள்ள கோயில் வரை சென்று வரும்படி கூறியிருக்கிறார். இதையடுத்து அவரது தம்பி வெளியே சென்ற பின், வீட்டின் சமையலறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் மாணவர் சிவா.

அருகில் இருந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த மாணவனின் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோர்கள் மகனின் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாததால், மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications