திருச்சியில் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவர் பலி: ரிசார்ட் உரிமையாளர் உள்பட இருவர் கைது
திருச்சி மாவட்டம், வயலூர் அருகே ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவர் மூழ்கி உயிரிழந்த விவகாரத்தில் அந்த ஹோட்டல் உரிமையாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி: திருச்சி மாவட்டம் வயலூர் அருகே ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவர் மூழ்கி உயிரிழந்த விவகாரத்தில் அந்த ஹோட்டல் உரிமையாளரும், மேலாளரும் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி புறநகர் பகுதியான சோமரசம்பேட்டையை அடுத்துள்ள வயலூரில் சிவபால குரு என்பவர் தங்கும் விடுதியை நடத்தி வருகிறார். இயற்கை எழில் கொஞ்சும், கிராம சூழல் கொண்ட இந்த ஹோட்டலில் செயற்கை நீச்சல் குளமும் உள்ளது.
இந்நிலையில் 7 அடி ஆழம் கொண்ட இந்த குளத்தில் 15 பேர் வரை நீச்சல் அடிக்கலாம். ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் அப்பகுதியை சுற்றியுள்ள மாணவர்கள், இளைஞர்கள், ஹோட்டலில் தங்குவோர் என நீச்சல் குளத்தில் குளித்து வெப்பத்தை தணித்து வருகின்றனர்.
இதற்கு பெரியவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.100-ம், சிறியவர்களுக்கு ரூ.50-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கோடை விடுமுறை என்பதால் நேற்று இந்த நீச்சல் குளத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் குளித்து கொண்டிருந்தனர். அப்போது திருச்சி பால்பண்ணை அருகில் உள்ள மகாலட்சுமி நகரைச் சேர்ந்த முஸ்தபா மகன் அபுதாகீர் (12). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சல்மான் (15), நிஜாம் (15) ஆகியோருடன் அந்த நீச்சல் குளத்திற்கு குளிக்க வந்துள்ளார்.
அப்போது அவர்களுக்கான நேரம் முடிந்தவுடன் புறப்படும் நேரத்தில் அபுதாகீரை காணவில்லை என்று தேடினர். இதைத் தொடர்ந்து ஊழியர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் நீச்சல் குளத்தின் நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்த தீயணைப்பு துறையினரும், போலீஸாரும் சம்பவ இடம் விரைந்தனர்.
இந்நிலையில் அபுதாகீர் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். கூட்டம் நெரிசல் காரணமாகவும், குளத்தில் மேல் இருந்து யாரேனும் குதித்தபோது அபுதாகீர் மீது விழுந்து அவர் மூச்சுதிணறி உயிரிழந்திருக்கலாம் என்று தெரிகிறது. முறையான பாதுகாப்பு அம்சங்களை வழங்காததால்ஓட்டல் உரிமையாளர் சிவ பாலகுரு, மேலாளர் கணேசலிங்கம் ஆகிய இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.