ஒடும் ரயிலில் இருந்து விழுந்து மாணவன் மரணம்: மாணவர்கள் போராட்டம்… போலீஸ் தடியடி
திருவள்ளூர்: மின்சார ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவனுக்கும், டிக்கெட் பரிசோதகருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் வேப்பம்பட்டு அருகே ஓடும் ரயிலில் இருந்து மாணவன் தவறி விழுந்து இறந்தான். இதனால் மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த அம்மையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (19). இவர் பட்டாபிராமில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி வேப்பம்பட்டு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இன்று காலை கல்லூரிக்கு செல்வதற்காக பட்டாபிராமில் மின்சார ரயிலில் ஏறினார்.
வேப்பம்பட்டு அருகே வந்தபோது காலை 8.30 மணிக்கு டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்தார். ராமன் பாஸ் வைத்திருப்பதாக கூறி காண்பித்தார். அப்போது திடீரென இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ராமனின் சட்டையை பிடித்து டிக்கெட் பரிசோதகர் இழுத்து விட்டதாக தெரிகிறது. அப்போது கதவு அருகே நின்றிருந்த ராமன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது கால் எலும்பு முறிந்தது. எனினும் ரயில் நிற்காமல் சென்றது.
ரயிலில் இருந்த மாணவர்கள் இதை பார்த்து சத்தம் போட்டனர். உடனே மற்ற மாணவர்களுக்கு போனில் தகவல் கூறினர்.
உடனே கல்லூரி ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு வந்தது. ராமனை ஏற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமன் உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்ததும் காலை 9 மணிக்கு கல்லூரி மாணவர்கள் 1000க்கும் மேற்பட்டோர் வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் குவிந்தனர். அவர்கள் தண்டவாளத்தில் உட்கார்ந்து அந்த வழியாக வந்த மற்ற ரயில்களை மறித்தனர். டிக்கெட் பரிசோதகரை கைது செய் என்று கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன், போலீசார் விரைந்து சென்று மாணவர்களிடம் சமரச பேச்சு நடத்தினர். டிக்கெட் பரிசோதகரை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று மாணவர்கள் கூறினர்.
இதனால் சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் புறநகர் மின்சார ரயில், அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரல் வந்த ரயில்கள் என மொத்தம் 8 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரயில்களில் இருந்த பயணிகள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இந்நிலையில் மாணவர்கள் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. உடனே போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் அலறியடித்து ஓடினர். சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் ரயில்கள் ஓட தொடங்கின. இந்த சம்பவத்தால் வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications