பிளஸ் டூவில் பாஸ்.. கொண்டாட நண்பர்களுடன் ஏற்காடு சென்ற மாணவர் விபத்தில் பலி
ஈரோடு: பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி அடைந்ததை கொண்டாட ஏற்காடு சென்ற மாணவர் விபத்தில் சிக்கி பலியானார்.
ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகன் தேவராஜ்(18). அவர் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி அடைந்ததால் மகிழ்ச்சியில் இருந்தார். இதை கொண்டாட அவர் தனது நண்பர்கள் அஜீத்(18), தர்மன்(17), பூபதி(21) ஆகியோருடன் சேர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டுக்கு இரண்டு பைக்குகளில் கிளம்பினார்.
ஒரு பைக்கில் தேவராஜும், பூபதியும், மற்றொரு பைக்கில் அஜீத்தும், தர்மனும் சென்றனர். செவ்வாய்க்கிழமை காலை ஈரோட்டில் இருந்து கிளம்பினர். அவர்கள் சேலம் மாவட்டம் கந்தம்பட்டி புறவழிச் சாலையில் செல்கையில் தேவராஜ்-பூபதி சென்ற பைக் மீது பின்னால் வந்த வேன் ஒன்று மோதியது.
இதில் தேவராஜ் மற்றும் பூபதி ஆகியோர் கீழே விழுந்தனர். அப்போது வேனின் பின்பக்க டயர் தேவராஜ் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த பூபதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications