உயிரைப் பறித்த “செல்பி”- கொல்லிமலை முகட்டிலிருந்து தவறி விழுந்து மாணவர் பலி!
வேதாரண்யம்: கொல்லிமலையில் மலை முகட்டில் நின்று "செல்பி" எடுத்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்பக்காரன் நல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் பிரகாஷ். இவர் நாமக்கல் அருகே உள்ள எருமபட்டி தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பிரகாஷ் தன்னுடன் படிக்கும் மாணவர்களுடன் பண்ணைகாரன்பட்டி வழியாக கொல்லிமலைக்கு ஒற்றையடி பாதையில் மேலே ஏறிச்சென்றனர்.
அங்குள்ள மலை முகட்டில் நின்று தன்னுடைய செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டிருந்தபோது பிரகாஷ் திடீரென கால் வழுக்கி, பாறையில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அவருடன் சென்றிருந்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலையில் இந்தச் சம்பவம் நடந்ததாலும், அன்று இரவு மழை பெய்ததாலும், இரவு நேரம் என்பதாலும் போலீஸாரால் மீட்புப் பணியில் ஈடுபட முடியவில்லை.
இதையடுத்து நேற்று காலை எருமப்பட்டி மற்றும் வாழவந்திநாடு போலீஸார் சுமார் 100 மீட்டர் பள்ளத்தில் கிடந்த பிரகாஷின் உடலை மீட்டனர். இதுகுறித்து, வாழவந்தி நாடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications