ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மெரினாவில் மாணவர்கள் போராட்டம்... போலீசார் அதிர்ச்சி
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மெரினாவில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மாணவர்களை கைது செய்தனர்.
சென்னை: புதுக்கோட்டையில் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு என்ற பெயரில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மாணவர்களிடையே எதிர்ப்பு வலுத்து வருகிறது.
புதுக்கோட்டை நெடுவாசல் கிராமத்தில் 5000 அடி ஆழத்திற்கு துளையிட்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனை எதிர்த்து நெடுவாசல் கிராம மக்கள் 11 நாட்களாக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராடும் கிராம மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
மெரினா புரட்சி
இதனைத் தொடர்ந்து சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஒன்று கூடியது போல மாணவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட மெரினா கடற்கரையில் திருவள்ளுவர் சிலை அருகில் கூடினர். அந்த இடத்திலேயே போராட்டத்தை தொடங்கவும் முயற்சி செய்தனர்.
மாணவர்கள் கைது
யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று மாணவர்கள் கடற்கரையில் ஒன்று கூடியதால், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாணவர்களிடம் சென்று இங்கு ஒன்று கூடக் கூடாது என்றும் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட இடம் என்றும் கூறி அவர்களை கைது செய்தனர்.
திருச்சியில் பேரணி
திருச்சியிலும் மாணவர்கள் இதே திட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தினார்கள். மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள் திருச்சி சட்டக் கல்லூரியில் இருந்து பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை முழங்கினார்கள்.
அரியலூர் போராட்டம்
இதே போன்று அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளும் கல்லூரியில் இருந்து பேரணியாக புறப்பட்டு சென்று ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். அப்போது, "எதிர்ப்போம் எதிர்ப்போம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்" என்றும், "அழிக்காதே அழிக்காதே விவசாயத்தை அழிக்காதே" என்பன உள்ளிட்ட கோஷங்களை மாணவர்கள் எழுப்பினர்கள்.












Click it and Unblock the Notifications