அலங்கோலப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நீட் சோதனை - ஹைகோர்ட்டில் வழக்கு
நீட் தேர்வு சோதனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: நீட் தேர்வின் போது நடத்தப்பட்ட கொடுமையான சோதனையால் மாணவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டதாக கூறி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை நாளை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது.
மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு 'நீட்' நாடு முழுவதும் ஞாயிறன்று நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழகத்தில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.

அலங்கோலம்
மாணவர்களை சோதனைக்குட்படுத்துகிறோம் என்கிற பெயரில் தலை முதல் கால் வரை மெட்டல் டிடெக்டர் வைத்து சோதித்தனர். அதிகபட்ச கொடுமையாக தலைவாரி பின்னலிட்ட மாணவிகள் சடை முடிகளிலெல்லாம் சோதித்துப் பார்த்தனர். மாணவிகளின் கம்மல், ஹேர்பின்கள் உருவப்பட்டன.
தலைவிரி கோலமாய் மாணவிகள் தேர்வு எழுத சென்றனர்.

சட்டை கிழிந்த மாணவர்கள்
மாணவர்கள் முழு கை சட்டையை கத்தரித்துக் அரை கை சட்டையாக மாற்றிக்கொண்டு தேர்வு எழுதும் அறைக்கு சென்றனர். ஜீன்ஸ் பேண்ட் பட்டன், ஜிப் முதல் அனைத்தும் மெட்டல் டிடெக்டர் கொண்டு ஆராயப்பட்டது.

காதில் டார்ச்
மாணவர்கள், மாணவிகளின் காதில் டார்ச் அடித்து பார்த்த கொடூரமும் அரங்கேறியது. இத்தனை சோதனைக்கு ஆளான பின்னர் தேர்வு அறைக்கு சென்ற மாணவர்கள் மன உளைச்சலுடன் தேர்வை எழுதினர்.

உள்ளாடைகள் அகற்றம்
கேரளாவில் கண்ணூர் உட்பட பல பகுதிகளில் நீட் தேர்வின் போது மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றச் சொன்னது கொடூரத்தின் உச்சமாக இருந்தது. இது நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சிபிஎஸ்இ விளக்கம்
கண்ணூரில் நீட் தேர்வின்போது நடத்த சம்பவமானது துரதிருஷ்டவசமானது. தேர்வின் போது கண்காணிப்பு பணியில் இருந்த யாரோ சிலரது தனிப்பட்ட ஆர்வமிகுதியின் காரணமாக ஏற்பட்ட விளைவுதான் இதுவாகும். இருப்பினும், தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு தவறுதலாக ஏற்பட்ட சிரமத்திற்கு வாரியம் வருந்துகிறது. தேர்வு அறைகளுக்குள் நுழைவதற்கு முன்னர் எடுக்கப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து இணையதளங்கள், தகவல் அறிவிப்புக்கள், அச்சிடப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல்கள், எஸ்எம்எஸ் மூலம் தேர்வு எழுத வருபவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது என சிபிஎஸ்இ விளக்கம் அளித்து உள்ளது.

ஹைகோர்ட்டில் வழக்கு
இந்த நிலையில் நீட் தேர்வின் போது நடத்தப்பட்ட கொடுமையான சோதனையால் மாணவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டதாக கூறி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை நாளை உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications