பாக்கெட் மணியால் விபரீதம் – 6ம் வகுப்பு மாணவனின் கழுத்தை அறுத்த சக மாணவர்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பாக்கெட் மணிக்காக 6ஆம் வகுப்பு மாணவனின் கழுத்தை சக மாணவர்கள் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தொகுதியில் உள்ள தென்னம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள சீத்தாம்பட்டியைச் சேர்ந்த மாணவன் முத்தப்பா 6 ஆம் வகுப்பு படித்து வந்தான். இவனுக்கு இலவச பஸ் பாஸ் உள்ளது. இருப்பினும் வீட்டில் உள்ளவர்கள் தினமும் 5 ரூபாய், 10 ரூபாய் கொடுத்து அனுப்புவார்கள்.
இவன் தன்னுடன் படிக்கும் 4 பேருடன் தினமும் தான் வைத்திருக்கும் காசில் ஏதாவது திண்பண்டங்களை வாங்கி சாப்பிடுவான். நாளடைவில் 4 பேரும் நெருங்கி பழகியதால், முத்தப்பாவிடம் வீட்டில் அதிகமாக பணம் கேட்டு வாங்கி வா, இல்லையென்றால் யாருக்கும் தெரியாமல் எடுத்துவர சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.
நண்பர்களின் பேச்சைக் கேட்டு ஒரு நாள் பெரிய தொகையை எடுத்து வந்துவிட்டான். வீட்டில் பணம் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் முத்தப்பாவிடம் விசாரித்துள்ளனர். அவன் தனது நண்பர்கள் எடுத்துவர சொன்னதாக கூறியதும், பள்ளிக்கு சென்று அந்த 4 மாணவர்களையும் கண்டிக்கும்படி கூறியுள்ளனர்.
இதையடுத்து பள்ளியில் உள்ளவர்கள், 4 பேரின் மாணவ பெற்றோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து நீங்கள் உங்கள் பிள்ளைகளை கண்டியுங்கள் என்று கூறியுள்ளனர்.
இது போலீசார் வரை சென்றது. முத்தப்பாவுக்கு இனிமேல் பணம் எதுவும் கொடுத்து அனுப்பாதீர்கள் என்று பள்ளி நிர்வாகமும், போலீசாரும் கூறியதால் தற்போது முத்தப்பாவுக்கு வீட்டில் காசு கொடுப்பதில்லை.
இந்தநிலையில் அந்த 4 மாணவர்களும் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி அளவில் முத்தப்பாவின் பஸ் பாஸை பிடிங்கிக்கொண்டு ஓடினர். முத்தப்பா துரத்தினான். பஸ் போக்குவரத்து இல்லாத காட்டுவழிப்பாதையில் முத்தப்பாவை 4 பேரும் பிடித்து அடித்து, ஒரு பள்ளத்தில் தள்ளி பிளேடால் குரல்வளையை அறுத்துள்ளனர். சத்தம் போடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த 4 பேரும் தப்பித்துவிட்டனர்.
தன் மகள் வீட்டுக்கு அந்த வழியாக சென்று முத்தப்பாவின் தாய், என்ன சத்தம் வருகிறது என கேட்டுக்கொண்டே பள்ளத்தை எட்டிப்பார்த்தார். அங்கு தனது மகன் முத்தப்பா ரத்த வெள்ளளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
மேலும், நடந்த சம்பவம் குறித்து முத்தப்பாவின் பெற்றோர் வடமதுரை போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த 4 மாணவர்களும் பயத்தில் ஓடிவிட்டனர். எங்கு போனார்கள் என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications