சென்னைக்கு வந்த எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவர்கள் 20 பேர் கைது
சென்னை: எஸ்விஎஸ் மாணவி மோனிஷாவின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ள நிலையில், சென்னைக்கு வந்த அந்த கல்லூரி மாணவ- மாணவிகள் 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், பங்காரம் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் எஸ்.வி.எஸ். ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா, சென்னை எர்ணாவூரை சேர்ந்த மோனிஷா, திருவாரூரைச் சேர்ந்த பிரியங்கா ஆகியோர் கடந்த 23ம் தேதி கல்லூரிக்கு எதிரே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். மாணவிகள் தற்கொலை சகமாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, தனது மகன் மோனிஷாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவளது உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவரது தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மாணவி மோனிஷா உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டதோடு, உடலை சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், மறு பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் இருந்து மாணவி மோனிஷாவின் உடல் இன்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனிடையே, எஸ்விஎஸ் மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் 20 பேர் இன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வர முயன்றனர். அவர்களை நெற்குன்றம் பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திடீரென கைது செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.