ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு.. போராட்ட களத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்
Recommended Video
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், மாணவர்களுக்கும் விரிவடைந்துள்ளது. தூத்துக்குடியில் இன்று மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்த மாவட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆலை விரிவாக்க பணிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. அதிர்ச்சியடைந்த தூத்துக்குடி மக்கள் கடந்த பல நாட்களாக தீவிர போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற கண்டன பேரணியில் சுமார் 30,000 மக்கள் தன்னெழுச்சியாக பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் அரசியல் தலைவர்கள் துணையின்றி, தன்னெழுச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், போராட்டம் மாணவர்கள் மத்தியிலும் விரிவடைந்துள்ளது. தூத்துக்குடியிலுள்ள வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கெல்லாம் மாணவர்கள் ஒன்று கூடி கல்லூரிக்கு வெளியே நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று திங்கள்கிழமை கல்லூரிகள் திறந்துள்ளன என்பதால் தூத்துக்குடியின் வேறு பல கல்லூரிகளிலும் இந்த போராட்டம் பரவ கூடும் என தெரிகிறது.
ஜல்லிக்கட்டு பிரச்சினையின்போதும், மாணவ, மாணவிகள் ஓரணியில் திரண்டு போராட்ட களத்திற்கு வந்த பிறகுதான், அரசு விழித்துக்கொண்டு, அவசரமாக சட்டம் இயற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.