பட்டப்பகலில் பெண் எஸ்.ஐ வீட்டு கதவை உடைத்து 110 பவுன் நகை, பணம் கொள்ளை!
சென்னை: சென்னை, திருவல்லிக்கேணியில் பட்டப்பகலில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரது வீட்டிலேயே பவுன் கணக்கில் நகைகளும், பணமும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி தெருவில் வசிப்பவர் ராஜேஷ்வரி. இவரது மருமகள் அயனாவரத்தில் குற்றப்பிரிவு எஸ்.ஐ ஆக உள்ளார். நேற்று மதியம் ராஜேஷ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
12 மணி அளவில் ராஜேஷ்வரி வெளியே சென்றுவிட்டு மதியம் 2.30 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பதறிப்போன ராஜேஷ்வரி உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 110 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது பற்றி ராஜேஷ்வரி அளித்த புகாரின் பேரில் ஐஸ் ஹவுஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.