கொளுத்தும் வெயிலில் மக்கள்... குளுகுளு மேடையில் ஜெ... இடையில் ‘அடிமைகள்’... சுப.வீ தாக்கு
சென்னை: ஜெயலலிதாவோ குளு குளு மேடையில் அமர்ந்திருக்கிறார். ஆனால், பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் அடைக்கப்படுகின்றனர் என ஜெயலலிதாவின் பிரச்சாரக் கூட்டங்கள் குறித்து விமர்சித்துள்ளார் திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன்.
சட்டசபைத் தேர்தலையொட்டி கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டங்களில் வெயிலின் கொடுமையால் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், திருவள்ளுவர் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரனை ஆதரித்து திருவள்ளுரில் பல இடங்களில் வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார் திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுசெயலாளர் சுப.வீரபாண்டியன்.
அப்போது அவர் பேசியதாவது:-
234 தொகுதிகளிலும் நமக்கு நாமே பயணம் மூலம் பல்வேறு மக்களை சந்தித்து நான்கரை லட்சம் மனுக்களை மக்களிடம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பெற்றுள்ளார். இவ்வளவு மனுக்களை முதல்வர் கூட பெற்றதில்லை. அந்த மனுக்களை பரிசீலித்து, அதில் மக்களின் தேவைகளை கண்டறிந்து தயாரிக்கப்பட்டதுதான் திமுகவின் தேர்தல் அறிக்கை. திமுக மக்களுக்காக தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை என்பதைவிட, மக்களால் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை என்பதே பொருத்தமாக இருக்கும்.
ஜெயலலிதாவோ குளு குளு மேடையில் அமர்ந்திருக்கிறார். பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் அடைக்கப்பட்டனர். இடையில் அடிமைகள் (அதிமுக வேட்பாளர்கள்). இந்த அடிமைகள் காரை பார்த்து மட்டும் வணக்காமல், காரின் டயரைக் கூட தொட்டு வணங்கும் அவலம் உள்ளது.
சென்னை எழும்பூரில் ஆனந்த், விஜய் ஆகிய இளைஞர்களிடம் 5 கோடி கைப்பற்றப்பட்டது. அவர்கள் தஞ்சாவூர் மாவட்ட அதிமுக துணைத் தலைவர் விஜயகுமாரின் புதல்வர்கள். ராமநாதபுரத்தில் 5 கோடி கைப்பற்றப்பட்டது. அவர் யார் என்றால் அதிமுக சிறுபான்மை பிரிவின் பொறுப்பாளர். பொள்ளாச்சியில் நான்கேமுக்கால் கோடி மதிப்பில் மூக்குத்தி கைப்பற்றப்பட்டது. அவர் யார் என்றால் பொள்ளாச்சி ஜெயராமன் உறவினர். ஊத்தங்கரையில் கோடி கோடியாக பணம் கைப்பற்றப்பட்டதே அவர் அமைச்சர் பழனியப்பனின் உறவினர். இவ்வாறு அதிமுகவினர் கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்து வெற்றி பெற நினைக்கின்றனர்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications