பெரியார் 'நாயக்கர்'... 'திராவிடஸ்தான்' தனிநாடு கோரியவர்... ட்விட்டரில் சு.சுவாமி
Recommended Video
சென்னை: தந்தை பெரியார் 'திராவிடஸ்தான்' தனிநாடு கோரி பிரிட்டிஷாருடன் பேச்சுவார்த்தை நடத்தியவர் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டிருப்பது விவாதப் பொருளாகி உள்ளது.
தந்தை பெரியார் சிலையை அகற்றுவோம் என பாஜக தேசிய செயலர் எச். ராஜா கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. பின்னர் அட்மின்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என கூறி வருத்தம் தெரிவித்தார் எச். ராஜா.
தற்போது பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில், பெரியாரை 'நாயக்கர்' என ஜாதிப் பெயருடன் குறிப்பிட்டு ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில், பெரியார் நாயக்கர் சிலையை அகற்றுவதை நாம் எல்லோரும் எதிர்த்து கொண்டிருக்கிறோம். 15.8.1947 அன்று பிரிட்டிஷ் ஆளுநரை அவர் நேரில் சந்தித்து தமிழகத்தில் தங்க வேண்டும் என்று கூறியதை நினைவு கொள்வோம்.
|
விவாதப் பொருளான திராவிடஸ்தான்
மேலும் பிரிட்டிஷாருடனான பேச்சுவார்த்தையின் போது திராவிடஸ்தான் தனிநாடு கோரிக்கையையும் சேர்த்துக் கொள்ளுமாறு ஜின்னாவுக்கு கடிதம் எழுதினார் "நாயக்கர்" என்றும் பதிவிட்டிருக்கிறார் சு.சுவாமி. இது விவாதப் பொருளாகி இருக்கிறது.
தனிநாடு கேட்ட தந்தை பெரியார்
இந்தியா விடுதலைக்கு அடைவதற்கு முன்பே 1938-ம் ஆண்டு 'தமிழ்நாடு தமிழருக்கே' என முழங்கியவர் தந்தை பெரியார். 1940-ம் ஆண்டு நீதிக் கட்சி திராவிடர் கழகமாக மாறிய போது அதன் முதன் கொள்கையாக 'சென்னை மாகாணம்' (திராவிட நாடு) தனிநாடாக பிரிய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த திராவிட நாட்டை அடைவதற்காக கருஞ்சட்டைப் படை அமைக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மரணிக்கும் வரை தனிநாடு
நாடு பிரிவினை குறித்து பேச்சுகள் நடைபெற்ற போது தனி திராவிடஸ்தான் நாடு தொடர்பாகவும் தந்தை பெரியார் முயற்சிகள் மேற்கொண்டார். அதனால் இந்தியா விடுதலை அடைந்த போது அதை துக்க நாள் என்றார். நாடு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட போதும் தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என மரணிக்கும் போதும் முழங்கினார் பெரியார். நாட்டின் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தும் வரை திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ ஏடான விடுதலையில் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கம் இடம்பெற்றிருந்ததும் வரலாறு.
ராஜ்யசபாவில் அண்ணா பேச்சு
திமுகவும் திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தி பிரசாரம் செய்தது. பின்னர் அந்த கொள்கையை கைவிடுவதாக ராஜ்யசபாவில் அண்ணா அறிவித்தார். அப்போதுதான், பிரிவினை கோரிக்கையை கைவிடுகிறோம். ஆனால் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என ராஜ்யசபாவில் பேசியதும் வரலாற்றுப் பதிவு.