வாட்டிய வெயிலை விரட்டிய மழை... குளிர்ந்த சென்னை
சென்னை: சென்னையில் நேற்று பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளது. மாலையில் தொடங்கி இரவு வரை பெய்த மழையால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
சென்னையில் கடந்த பத்து தினங்களாவே வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் வெயில் சற்று தணிந்திருந்தது. மாலை 4 மணியளவில் மயிலாப்பூர், ராயப்பேட்டை, சேப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் லேசாக மழை பெய்தது. அதன் பிறகு பல பகுதிகளில் பரவலாக மழை பெய்ய ஆரம்பித்தது.

மாலை முதலே விட்டு விட்டு பெய்த மழை இரவில் தீவிரமடைந்தது. அடையாறு, பட்டினப்பாக்கம் , மந்தைவெளி, தேனாம்பேட்டை, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது. திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அண்ணாசாலை, நுங்கம்பாக்கம் பகுதியிலும் கனமழை பெய்த காரணத்தால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சில இடங்களில் வெள்ளநீர் குளம்போல தேங்கியது.
கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், நந்தனம், நுங்கம்பாக்கம், நங்கநல்லூர், தாம்பரம், பழவந்தாங்கல், உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது. மாலையில் மழை பெய்த போதும் நேற்று பிற்பகலில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று 39.6 டிகிரியும் மீனம்பாக்கத்தில் 39 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது..
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications