வெளுத்து வாங்கும் கோடைமழை: குற்றால அருவிகளில் வெள்ளம்.. குளிக்கத் தடை!
திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
கோடை காலத்தின் உச்சகட்டமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் ஞாயிறன்று தொடங்கியது. ஆனால், வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. திங்கட்கிழமையும் பல இடங்களில் மழை பெய்தது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெயில் கடுமையாக இல்லை. பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டமாக இருந்தது. காலை முதலே பல இடங்களில் லேசான மழையும், சில இடங்களில் பலத்த மழையாகவும் பெய்தது.
குற்றால அருவிகளில் தண்ணீர்
நெல்லை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான குற்றாலத்தில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஞாயிறன்று தென்காசி, குற்றாலம் மலை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் திங்கட்கிழமை காலை முதல் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் அதிகளவில் விழுந்தது.
கோடை விடுமுறை
தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகள் கூட்டம் குற்றாலத்தில் அதிகரித்து வருகிறது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து, உற்சாகமாக குளித்தனர்.
இடியுடன் மழை
செங்கோட்டை பகுதியில் மாலை 4.15 மணிமுதல் 5 மணிவரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதே போல் அம்பை, விக்கிரமசிங்கபுரம், முக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது.இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
அணைகளுக்கு தண்ணீர்
நேற்று இரவு முதலே மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் குண்டாறு நீர்த்தேக்கம், கேரளமாநிலம் பாலருவி, உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலத்தில் வெள்ளம்
குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அருவிகளில் பயணிகள் குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
சீசன் தொடங்கியது?
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் சீசன் தொடங்கி ஆகஸ்ட் வரை நீடிக்கும். தற்போது கோடைக்காலத்தில்
குற்றாலத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது சீசனை பாதிக்குமா, அல்லது மழை நீடிக்குமா போகப்போகத்தான் தெரியும்.