சென்னையில் கோடை மழை.. மண்வாசனையோடு பரவிய குளுமை
சென்னையில் அதிகாலை முதல் பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. மண் வாசனை மணக்க பெய்து வரும் மழையால் நகரின் பகுதிகளில் குளுமை பரவியுள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல பகுதிகளில் கோடை மழை பெய்த நிலையில் இன்று காலை முதலே சென்னையின் பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
அதிகாலை முதலே மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், அண்ணாநகரில் மண்வாசனை மணக்க சாரல் மழை பெய்து வருகிறது.
மண்வாசனை மணக்க மணக்க கோடை மழை பெய்வதால் வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளதால் சென்னைவாசிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
தென் மாவட்ட மழை
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதன் காரணமாக கடந்த சில நாட்களாக நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டியது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
நிரம்பும் நீர் நிலைகள்
கோடை மழை கொட்டியதால் தென் மாவட்டங்களில் சுட்டெரித்த வெயில் தணிந்து இதமான சூழல் நிலவியது. மேலும் தென் மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளும் வேகமாக நிரம்பின. கோடைக்காலத்தின் தொடக்கத்திலேயே கொட்டிய மழையால் தண்ணீர் பிரச்சினை தீரும் என மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வானிலை மையம்
இதனிடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுகுறைந்து தாழ்வு பகுதியானது அதே பகுதியில் நீடிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக வடதமிழகத்தின் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் என்றும் அவர் கூறினார்.
முதல் கோடை மழை
சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக பாலச்சந்திரன் கூறியது போல நேற்றிரவு முதலே பல பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இன்று அதிகாலை முதல் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
முதல் துளி மழை
சென்னை மண்ணை மழையின் முதல் துளி ஸ்பரிசித்துள்ளது. மண் வாசனை அருமை என்று அதிகாலை பெய்த மழையை ரசனையோடு பதிவிட்டுள்ளார் மழை மனிதர் தமிழ்நாடு வெதர்மேன்.
கோடையில் சாரல் மழை
சென்னை: பாரிமுனை, ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்வதாக பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர். கோடை மழை குளிர்விப்பதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.