ஒளிந்து விளையாடும் வெயில்.. குளு குளு காற்று... மெரீனாவில் அலைமோதும் கூட்டம்!
சென்னை: கொளுத்தும் கோடை வெயில்... சட்டென்று பெய்யும் மழை என வானிலை அவ்வப்போது மாறி வருவதால் சென்னைவாசிகள் மாலை நேரமானால் மெரீனா கடற்கரையில் காற்று வாங்க குவிந்து விடுவது வழக்கம். விடுமுறை நாளான நேற்று, குளுகுளு காற்று... இதமான வானிலையை அனுபவிக்க பல்லாயிரக்கணக்கனோர் மெரீனாவில் குவிந்தது மக்கள் கூட்டம்.
சென்னைவாசிகளுக்கு அதிகம் காசு செலவில்லாத சுற்றுலா தலம் என்றால் அது மெரீனா கடற்கரைதான். ஷாப்பிங் மால்களுக்கு போய் ஏசி காற்றில் சுற்றிக்கொண்டிருப்பதை விட இயற்கையாக கிடைக்கும் குளுகுளு காற்றை அனுபவிக்க கடற்கரையில் பெரும்பாலோனோர் குவிந்து விடுவார்கள்.
பொங்கி வரும் நுரையோடு கரையை தொடும் அலையில் கால் நனைத்து விளையாடுவார்கள் சிலர். இன்னும் சில குழந்தைகளோ மணல் வீடு கட்டி விளையாடுவார்கள். இளசுகளோ கடல் நீரில் உற்சாகமாக குளித்து மகிழ்வார்கள்.

விடுமுறை தினத்தில்
கோடை விடுமுறை விடப்பட்டு ஒரு மாதகாலம் ஆன நிலையிலும் நேற்று ஞாயிறுக்கிழமை என்பதால் சிலர் தங்களது குடும்பத்தினரோடு கடற்கரை மணலில் அமர்ந்து எழில்மிகுந்த கடலின் அழகை பார்த்து ரசித்தனர். மாலையில் கடற்கரையில் எங்கு பார்த்தாலும் பொதுமக்களின் தலைகளாகவே காணப்பட்டது.

கலங்கரை விளக்கம்
கலங்கரை விளக்கத்தை கண்டு ரசிக்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மக்கள் வரிசை வரிசையாக நின்று கலங்கரை விளக்கத்தின் மீதேறி மிக நீண்ட கடற்கரையான மெரீனா வின் அழகை கண்டு ரசித்தனர்.

கடல் குளியல்
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உற்சாக மிகுதியில் சிலர் கடலில் நீராடி தங்களுடைய உஷ்ணத்தை தணித்தனர். கடலில் குளிப்பவர்களை அவ்வப்போது ரோந்து வரும் போலீசார் எச்சரித்து வருகின்றனர்.

விளையாட்டு உற்சாகம்
கடற்கரைக்கு பொழுதை கழிப்பதற்காக வந்திருந்தவர்கள் குதிரை சவாரி செய்தல், ராட்டினங்களில் சுற்றுதல், பலுன்களை துப்பாக்கியால் குறிபார்த்து சுடுதல் என மனதுக்கு மகிழ்ச்சிதரும் விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.
நீங்களும் ஒரு ரவுண்டு வந்துட்டு போங்களேன்...












Click it and Unblock the Notifications