மேலும் 2 எம்.பிக்கள் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு.. ஒரே நாளில் 5 எம்.பிக்கள் ஆதரவு குவிந்தது!
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இதுவரை 8 எம்.பிக்கள், 6 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் மன்னார்குடி கோஷ்டி திணற ஆரம்பித்துள்ளது
சென்னை: முதல்வர் ஓபிஎஸ்க்கு முன்னாள் அமைச்சர் ஜெயபால் ஆதரவு தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் அணிக்கு அணி தொடரும் ஆதரவால் மன்னார்குடி கும்பல் செய்வறியாது திகைத்துள்ளது.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டி ராஜினாமா கடிதம் பெற்ற மன்னார்குடி கும்பல் எப்படியாவது முதல்வர் பதவியை கைப்பற்ற வேண்டும் என துடியாய் துடித்து வருகிறது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவிப்பதை தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை மன்னார்குடி கும்பல் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைத்துள்ளது.
இருப்பினும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து சசிகலா தரப்பு நிர்வாகிகள் அணி மாறி வருகின்றனர். தற்போது வரை பெரும்பான்மையை வைத்துள்ள சசிகலா தரப்பு எம்எல்ஏக்கள் அணி தாவலால் அச்சமடைந்துள்ளது.
பீதியில் மன்னார்குடி கும்பல்
மொத்த எம்எல்ஏக்களும் ஓபிஎஸ் அணிக்கு தாவுவதற்குள் அரியணையில் அமர்ந்துவிட வேண்டும் என முனைப்பாய் உள்ள சசிகலா ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக்கோரி ஆளுநருக்கு மிரட்டல் விடுத்து வருகிறது. தமிழகத்தில் கலவரத்தை உண்டாக்கவும் மன்னார்குடி கும்பல் திட்டமிட்டுள்ளது.
ஓபிஎஸ்க்கு அதிகரிக்கும் ஆதரவு
இதனால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவு அதிகரித்த வண்ணம் உள்ளது.
மேலும் 5 எம்பிக்கள் ஆதரவு
இன்று காலை அதிமுக எம்பிஎக்கள் 3 பேர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். வேலூர் எம்பி செங்குட்டுவன், தூத்துக்குடி எம்பி ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, பெரம்பலூர் எம்பி மருதுராஜா ஆகியோர் காலையில் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது மேலும் 2 எம்பிக்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எம்பிக்கள் ஆதரவு 10 ஆக அதிகரிப்பு
ஏற்கனவே மைத்ரேயன் உள்ளிட்ட 5 எம்பிக்கள் ஆதரவு அளித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை 2 எம்பிக்கள் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது விழுப்புரம் ராஜ்யசபா எம்.பி லட்சுமணன் மற்றும் விழுப்புரம் லோக்சபா எம்.பி ராஜேந்திரன் ஆகியோர் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவத்வித்துள்ளனர். இதன்மூலம் ஓபிஎஸ் ஆதரவு எம்பிக்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
6 எம்எல்ஏக்கள் ஆதரவு
ஓபிஎஸ் அணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உட்பட 6 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கேபி.முனுசாமி நத்தம் விசுவநாதன், பொன்னையன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும் ஓபிஎஸ்க்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயபாலும் சேர்ந்தார்
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயபாலும் முதல்வர் ஓபிஎஸ்க்கு இன்று ஆதரவு தெரிவித்துள்ளார். ஜெயபால் அதிமுக மாநில மீனவர் அணி செயலாளராக உள்ளார்.
முன்னாள் எம்எல்ஏக்கள் 9 ஆக அதிகரிப்பு
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தனர். தற்போது முன்னாள் அமைச்சர் ஜெயபாலுவின் ஆதரவு மூலம் ஓபிஎஸ் ஆதரவு முன்னாள் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆதரவு
ஓபிஎஸ் அணிக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்துள்ளது. பொதுமக்களும் ஓபிஎஸ்தான் முதல்வராக வேண்டும் என விரும்புகின்றர். அரசியல்வாதிகள், அரசியல்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு ஓபிஎஸ்க்கு பெருகி வருவதால் மன்னார்குடி கும்பல் பீதியடைந்துள்ளது.