சசிகலாவை முதல்வராக்கவா ஓட்டு போட்டோம்? அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு!
சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுத்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது ஆதரவாளர்களும் பொதுமக்களும் கடும் கோபத்தில் உள்ளனர். சசிகலாவை முதல்வராக்க ஒப்புதல் தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்
சென்னை: சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுக்க ஒப்புதல் தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது அவர்களது ஆதரவாளர்களும் பொதுமக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். சசிகலாவை முதல்வராக்க நாங்க ஆதரிக்கவில்லை; அதனால் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்ற முழக்கத்தால் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்.
ஜெயலலிதாவை முன்னிறுத்தி சட்டசபை தேர்தலை எதிர்கொண்டனர் அதிமுகவினர்... தமிழக மக்களும் 32 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆளும் அதிமுகவையே மீண்டும் அரியாசனத்தில் அமரவைத்தனர்.
முதல்வராக ஓபிஎஸ்
ஆனால் உடல்நலக் குறைவால் ஜெயலலிதா காலமாகிவிட்டார். இதையடுத்து முதல்வராக நிதி அமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் அமரவைக்கப்பட்டார். இதை தமிழக மக்களும் வரவேற்றனர்.
முதல்வராக சசிகலா
அதேநேரத்தில் தொண்டர்களின் விருப்பத்துக்கு எதிராக அதிமுவை சசிகலா கைப்பற்றினார். அத்துடன் பேராசை பிடித்தவராக மக்கள் விருப்பத்துக்கு எதிராக முதல்வர் பதவியில் உட்காரவும் முடிவு செய்திருக்கிறார் சசிகலா.
ஆதரிக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்
சசிகலாவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்துள்ளனர். சசிகலா ஓரிருநாட்களில் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
பொதுமக்கள் கொந்தளிப்பு
இந்த நிலையில் சசிகலாவை போய் எப்படி நீங்க ஆதரிக்கலாம்? சரி உங்க கட்சி விவகாரம்னு இருந்தோம்... இப்படி முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்கலாமா? என அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது பொதுமக்கள் பாய்ச்சலை வெளிப்படுத்தி வருகின்றனர். சசிகலாவை முதல்வராக்கத்தான் உங்களுக்கு நாங்கள் ஓட்டு போட்டோமா? எங்க வாக்குகளை வாங்கி சசிகலாவை முதல்வராக்க வேண்டாம்; அதுக்கு ராஜினாமா செய்துவிடுங்கள் என்றும் போர்க்கொடி தூக்கியுள்ளனர் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள். இந்த நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அதிர்ந்து போயுள்ளனர்.