வெளியூர்காரர்கள் 5000 பேர் ஆர் கே நகரில் முகாமிட்டு பிரச்சாரம்.. இதிலும் தினகரன் ஆட்கள்தான் அதிகமாம்
ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வெளியூர்காரர்கள் ஆர். கே. நகரில் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதிலும் அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளர் தினகரன் ஆதரவாளர்கள்தான் அதிகமாம்.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட 5000க்கும் மேற்பட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முகாமிட்டுள்ளனர்.
திமுக, அதிமுக அம்மா, அதிமுக புரட்சித் தலைவி அம்மா, தீபா பேரவை, பாஜக என பல்வேறு கட்சிகளின் சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள், நிர்வாகிகள் ஆர்.கே. நகரில் குவிந்துள்ளனர்.
சுமார் 5000க்கும் அதிகமான ஆட்கள் இங்கு பிரச்சாரத்திற்காக முற்றுகையிட்டுள்ளனர். அவர்கள் தங்கள் ஆதரவு வேட்பாளர்களுக்காக பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
பறக்கும் பெரிய கார்கள்
ஆர்.கே. நகரில் எங்கு பார்த்தாலும் வெளியூர் வாகனங்கள் குறுக்கும் மறுக்குமாக பறந்து கொண்டிருக்கின்றன. பேன்சி எண்கள் கொண்ட இனோவா போன்ற பெரிய பெரிய கார்களில் கட்சிக் கொடிகளை கட்டிக் கொண்டு வந்து அச்சமுறுத்தி வருகின்றனர் என்கின்றனர் தொகுதிமக்கள்.
தினகரன் ஆட்களே அதிகம்
இதிலும் அதிகமான வண்டிகள் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாகவே பறக்கிறது. அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவே அதிக அளவில் வெளியூர்காரர்கள் ஆர்.கே. நகர் தொகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிரம்பி வழியும் விடுதிகள்
அதே போல ஆர்.கே. நகர் தொகுதிக்குட்ட மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள் எப்போது பரபரப்பாக கூட்டம் அலை மோதி வருகிறது. தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்துள்ளன. இங்கிருந்து தங்கள் ஆதரவு வேட்பாளரை வெற்றி பெற வைக்க பிரச்சார வியுகத்தை அமைத்துக் கொள்கிறார்கள் வெளியூர்காரர்கள்.
தீவிர கண்காணிப்பு
ஆர்.கே.நகரில் வெளியூர் ஆட்கள் மூலமாக பணப்பட்டுவாடா முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனவே, இதனைக் கண்காணிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். வெளியூர் வாகனங்களை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வந்தாலும் பணப்பட்டுவாடா செய்யும் கும்பல் அதனை செய்து கொண்டுதான் இருக்கிறது.