அண்ணாமலை மீண்டும் பாஜக மாநில தலைவர் ஆகணும். . ஸ்ரீதர் வேம்பு முதல் பல ஆதரவாளர்கள் குரல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வென்றுள்ளது போட்டியிட்ட 28 இடங்களில் 27 இடங்களில் தோல்வியை தழுவியுள்ளது. இந்த படுதோல்வியால் பாஜக மாநில தலைவர் நைனா நாகேந்திரன் பதவி விலக வேண்டும் என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். அதேபோல் பாஜக நிர்வாகிகள் சிலர் வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன், எல் முருகன், நைனா நாகேந்திரன் ஆகிய நான்கு பேர் தான் பாஜகவின் தோல்விக்கு காரணம் என்று கடுமையாக விமர்சித்து போலியான ராஜினாமா கடிதங்களையும் பரப்பி வருகிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தவொக கட்சி 108 இடங்களில் வென்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதன் காரணமாக திமுக கூட்டணியில் உள்ள விசிக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடதுசாரிகள் ஆதரவுடன் தமிழகத்தின் முதல்வராக இன்று பொறுப்பேற்றுள்ளார் விஜய். தொங்கு சட்டசபை அமைந்த போதிலும் , திமுக கூட்டணியில் உள்ளவர்கள் ஆதரவளித்த காரணத்தால் விஜய் முதல்வர் ஆகியுள்ளார்.

ஆனால் பாரம்பரியமான தேசிய கட்சியான பாஜக, காங்கிரஸ், மாநிலக் கட்சிகளான அதிமுக திமுக போன்றவை இந்த தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளன. முதல்வராக இருந்த ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தார் . அதுபோல் திமுகவில் ஏராளமான அமைச்சர்கள் இந்த முறை தோல்வியை தழுவி உள்ளார்கள்.
அதிமுகவிலும் ஏராளமான முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் படுதோல்வி அடைந்துள்ளனர். பாஜகவை பொறுத்தவரை 28 இடங்களில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டது. அதில் 27 இடங்களில் தோல்வியை தழுவியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மட்டுமே பாஜக வெறும் ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளரை வென்றுள்ளது. மற்ற இடங்களில் எல்லாம் மோசமான தோல்வியை தழுவியுள்ளது பாஜக.
பாஜகவின் இந்த தோல்விக்கு அண்ணாமலை மாற்றியது தான் காரணம் என்று அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் குரல் எழுப்பி வருகிறார்கள். பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்தபோது 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பல்வேறு தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்திருந்தது . வாக்கு வங்கியும் பெரிய அளவில் பாஜகவிற்கு 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் உயர்ந்து காணப்பட்டது
ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பிய பாஜக டெல்லி மேலிடம், அதற்காக எடப்பாடி பழனிசாமியின் விருப்பத்திற்காக அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.. இந்த குற்றச்சாட்டு அப்போதே வேகமாக அண்ணாமலை ஆதரவாளர்களால் வைக்கப்பட்டது. எனினும் அண்ணாமலை இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்தார். சட்டசபை தேர்தல் தொடங்குவதற்கு முன் பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
ஆனால் சட்டசபை தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பாஜகவிற்கு கிடைக்கவில்லை. அதிமுக கடந்த முறை வென்ற நான்கு இடங்கள் கூட இந்த முறை கிடைக்கவில்லை . விஜய் அலை சுனாமியாக வந்ததால் பாஜகவிற்கு பெரும் தோல்வியே கிடைத்தது. இந்த சூழலில் பாஜகவின் தோல்வியை அடுத்து அத்தாட்சியின் தலைமை மாநில நிர்வாகிகள் விவகாரத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் கோரிக்கை எழுப்பி வருகிறார்கள்.
பாஜக ஆதரவாளராக அறியப்படும் தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு அண்ணாமலையை மாநில தலைவர் ஆக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை இன்று எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளார். பாஜக உள்ளே வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டி அரசியல் செய்து வந்ததாக திராவிட கட்சிகளுக்கு எதிராகவும் தனது கருத்தை ஸ்ரீதர் வேம்பு கருத்து பதிவிட்டு இருந்தார்.
இதனை அடுத்து பல அண்ணாமலை ஆதரவாளர்கள் இப்பொழுது சமூக வலைதளங்களில் அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் ஆக்க வேண்டும். அவர் இளைஞர்களிடையே நல்ல செல்வாக்கு உள்ளவர். இளைஞர்களிடையே விஜய்க்கு உள்ள செல்வாக்கை, பாஜகவிற்கு மாற்ற வேண்டுமென்றால் அண்ணாமலை போன்று இளைஞர்களே சரியானவர்கள் என்று அவரை ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்..














Click it and Unblock the Notifications