சஸ்பெண்ட் திமுக எம்.எல்.ஏக்கள் அரைமணி நேரம் நடத்திய போட்டி சட்டசபை கூட்டம்... பரபரப்பு
சென்னை: சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏக்கள் பேரவை வளாகத்துக்குள் போட்டி சட்டசபை கூட்டத்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. துணைத்தலைவர் துரைமுருகன் சபாநாயகராக நடிக்க போட்டி சட்டசபை கூட்டம் நடைபெற்றது.
தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்பதில் இருந்து சஸ்பெண்ட் திமுக எம்.எல்.ஏ.,க்கள் 80 பேரும் 2வது நாளாக இன்றும் வருவார்கள் என்று எதிர்பார்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டசபையை சுற்றிலும் அனைத்து வாயில்களிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் சட்டசபை வளாகத்தில் இன்றும் பதற்ற நிலையே காணப்பட்டது.

சட்டசபையில் புதன்கிழமையன்று நடைபெற்ற விவாதத்தின்போது அதிமுக உறுப்பினர் குணசேகரன் பேச்சுக்கு திமுக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர் அமளியால், திமுக உறுப்பினர்கள் அவை நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று கூறி திமுக சட்டசபை உறுப்பினர்கள் 80 பேரை ஏழு நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால்.
இந்நிலையில் வியாழக்கிழமையன்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன் உள்பட சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் பிரதான நுழைவு வாயிலான கேட் எண் 4இல் எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்குச் செல்ல முற்பட்டனர். ஆனால், காவலர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
நாங்க எதிர்க்கட்சி தலைவர் அறைக்குப் போகத்தான் வந்தோம். சட்டப்பேரவைக்கு அல்ல' என்றார் மா.சுப்பிரமணியன். ஆனாலும், காவலர்கள் அனுமதி தரவில்லை. இதனால் நான்காம் எண் கேட் வாயிலில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணாவில் ஈடுபட்ட திமுகவினர், தமிழக அரசைக் கண்டித்தும், சபாநாயகரைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பியவாறு அமர்ந்திருந்தனர். எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், துணைத்தலைவர் துரைமுருகனுக்கும் அனுமதி மறுக்கப்படவே அனைவரும் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த தர்ணா போராட்டம் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. இதையடுத்து, நான்காம் எண் கேட் முற்றிலுமாக மூடப்பட்டது.
இந்தச் சூழலில் இன்றும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டசபை வளாகத்திற்கு வந்தனர். இதனிடையே சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த சஸ்பெண்ட் செய்யப்படாத திமுக எம்.எல்.ஏக்கள் இன்றும் திமுக எம்.எல்.ஏக்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய இன்றும் வலியுறுத்துவோம் என்று கூறியுள்ளனர். சபாநாயகர் தங்களுக்கு சாதகமான முடிவு எடுக்கும் வரை வலியுறுத்துவோம் என்றும் பூங்கோதை எம்.எல்.ஏவும், ஐ.பெரியசாமி எம்.எல்.ஏவும் தெரிவித்தனர்.

சட்டசபைக்கு வெளியே பரபரப்பான காட்சிகள் காணப்பட்டாலும் அவை கேள்வி நேரத்துடன் தொடங்கி நடைபெற்றது.
விவசாய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இதனிடையே காலை 10.30 மணியளவில் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், எதிர்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் முன்னிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் சார்பில் போட்டி சட்டசபை கூட்டம் நடைபெற்றது.
4ம் எண் வாயில் அருகே போட்டி சட்டசபைக் கூட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
பொதுமக்களும் இந்த போட்டி சட்டசபைக் கூட்டத்தை வேடிக்கை பார்த்ததால் கோட்டை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. சுமார் அரை மணி நேரம் இந்த போட்டி சட்டசபைக் கூட்டம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications