சிகிச்சைக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் செல்கிறாரா?.. இல்லை என்கிறார் சுதீஷ்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சிகிச்சைக்காக இன்று இரவு சிங்கப்பூர் அழைத்துச் செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதை சுதீஷ் மறுத்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. கட்சிகள் தீவிரமாக களப் பணியில் இறங்கியுள்ளன. இருப்பினும் விஜயகாந்த் மட்டும் அமைதியாக வீட்டோடு இருக்கிறார். இந்த நிலையில் அவர் இன்று இரவு சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்வதாகவும்,அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் பிரேமலதா விஜயகாந்த் மகளிர் அணி மாநாட்டின்போது பேசுகையில், விஜயகாந்த்தின் உடல் சுகவீனங்கள் குறித்து விளக்கினார். அவரது தொண்டையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால்தான் அவர் பேசுவது புரியவில்லை என்றும் கூறியிருந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பும் கூட சிங்கப்பூர் போய் வந்தார் விஜயகாந்த்.
இந்த நிலையில் இன்று இரவு அவர் சிங்கப்பூர் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதை அவரது மைத்துனர் சுதீஷ் மறுத்துள்ளார். இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் போட்டுள்ள பதிவு:

தேமுதிக தலைவர் கேப்டன் அவர்களைப் பற்றியும், தேமுதிகவை பற்றியும் அவதூறு செய்திகளையும், அடிப்படை ஆதாரமற்ற பொய் செய்திகளையும் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூகவலைத்தளங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இதுபோன்ற செய்திகளை வெளியிடாமல், உண்மை செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக கேப்டன் அவர்கள் சிங்கப்பூருக்கு சிகிச்சைபெற செல்வதாக இன்று வெளியாகியுள்ள செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொண்டு வெளியிட வேண்டுகிறேன். - எல்.கே.சுதீஷ், தேமுதிக இளைஞரணி செயலாளர்
என்று சுதீஷ் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications