அப்பா... சாமி ஆளைவிடுங்க... இது 'தல' ஆபரேஷன்... சசிகலா கோஷ்டியை கைவிட்டு தலைதெறிக்க ஓடிய சு.சுவாமி!
டெல்லி மேலிடமே சசிகலா கோஷ்டிக்கு எதிராக தீவிரமாக களமிறங்கியுள்ளதால் தம்மால் ஆதரவு தெரிவிக்க முடியாது என கைவிரித்துவிட்டாராம் சுப்பிரமணியன் சுவாமி.
சென்னை: டெல்லி மேலிடத் தலைவரே நேரடியாக களத்தில் இறங்கியிருப்பதால் தம்மால் தொடர்ந்து ஆதரவு தர இயலாது என பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கைவிரித்தது சசிகலா கோஷ்டியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா கோஷ்டிக்கு முட்டுக் கொடுத்து வந்ததே சுப்பிரமணியன் சுவாமி. இத்தனைக்கும் சசிகலா சிறைக்குப் போக காரணமாக இருந்தவரும் இந்த சு.சுவாமிதான்.
மெனக்கெட்ட சுவாமி
ஆனால் சசிகலாவை முதல்வராக்குவதில் ரொம்பவே மெனக்கெட்டார் சு.சுவாமி. இதனால் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவையும் கூட விமர்சித்திருந்தார்.
திடீர் அமைதி
அத்துடன் இரட்டை இலை சின்ன விவகாரத்திலும் தேர்தல் ஆணையம் மீது பாய்ச்சலை வெளிப்படுத்தினார் சுவாமி. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சசிகலா கோஷ்டி தொடர்பாக எந்த கருத்தையும் அவர் தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.
சசி கோஷ்டி சந்திப்பு
இதனிடையே தங்களுக்கான குரலை தொடர்ந்து நீங்கள் தர வேண்டும் என்று சசிகோஷ்டியினர் சு.சுவாமியை சந்தித்தனர். அப்போது சு.சுவாமி, நான் மத்திய அமைச்சர்கள் சிலர்தான் உங்களுக்கு எதிராக இருப்பதாக நினைத்து குரல் கொடுத்துவிட்டேன்.
தலைதெறிக்க ஓடிய சுவாமி
ஆனால் டெல்லி தலைமையே உங்கள் குடும்பத்துக்கு எதிராக உக்கிரமாக இருக்கிறது... ஆகையால் இனியும் இந்த விஷயத்தில் நான் தலையிடுவதாக இல்லை. அப்படி நான் குரல் கொடுத்தால் என் அரசியல் எதிர்காலமே அஸ்தனமாகிவிடும் என பம்மியிருக்கிறார். இவரே இப்படி பதுங்கிவிட்டாரே என விழிபிதுங்கி கிடக்கிறது சசி கோஷ்டி.