சுவாதி கொலை வழக்கில் ரகசியம் காக்க முடியாதா? காவல்துறை மீது ஹைகோர்ட் சாடல்
சென்னை: சுவாதி வழக்கில் ரகசியம் காக்க தவறிய தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24ம் தேதி காலை 6.40 மணியளவில், இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி, வாலிபரால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். தற்போது ராம்குமார் என்ற வாலிபர்தான் இக்கொலையை செய்ததாக கூறி அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆனால் கொலை நடந்த பிறகு முதல் 3 நாட்கள் வழக்கு கிணற்றில் போட்ட கல் போல அசைவற்று கிடந்தது. அந்த சூழ்நிலையில், ஜூன் 27ம் தேதி இந்த விவகாரம் குறித்து ஹைகோர்ட் நீதிபதிகள் நாகமுத்து மற்றும் பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அரசு வழக்கறிஞரை அழைத்து கேள்வி கணைகளை தொடுத்தது.
2 நாட்கள் கால அவகாசம் தருகிறோம். வழக்கில் மெத்தனமாக இருந்தால் ஹைகோர்ட் தானாகவே முன்வந்து விசாரணையை நடத்த வேண்டிவரும் என்று எச்சரிக்கையும் விடுத்தது.
இந்நிலையில்தான், போலீசார் அதிரடி விசாரணை நடத்தி ராம்குமாரை கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். தற்கொலைக்கு முயன்ற அவர் தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இன்று நீதிபதிகள் நாகமுத்து மற்றும் பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மீண்டும், தமிழக அரசுக்கு சரமாரி கேள்விகளை கேட்டது. காவல்துறை தனது விசாரணையை ரகசியமாக மேற்கொள்ள முடியவில்லை என்றும் கோர்ட் கண்டித்தது.
அரசு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியிடம் நீதிபதிகள் அடுக்கடுக்காக கேட்ட கேள்விகள் இவைதான்:
சுவாதி கொலை வழக்கில் ராம்குமார்தான் குற்றவாளி என்று காவல்துறை முடிவு செய்தது எப்படி?
நீதிமன்றத்தில் வழக்கு வரும் முன்பே, ராம்குமார் சிகிச்சை பெறும் புகைப்படமும், வாக்குமூலத்தில் கூறிய தகவலும் ஊடகங்களில் வெளியானது எப்படி?
குற்றவியல் நடைமுறைகளை போலீசார் அப்பட்டமாக மீறியுள்ளனர். இது எப்படி நடந்தது? என்பது போன்ற கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.
மேலும், சுவாதி வழக்கை நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்காது என்றும் அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications